உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது.கடந்த ஏப். 11ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நாள் தோறும் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு விசேஷ பூஜைகள் நடந்து வருகிறது. நேற்று (ஏப்., 18ல்) பகல் மங்களேஸ்வரி, பிரியாவிடை மங்களேஸ்வரர் உற்ஸவ மூர்த்திகளாய் நான்குரத வீதிகளிலும் உலா வந்தனர். சடங்கு, நலுங்கு உருட்டுதல், மாப்பிள்ளை அழைப்பு, காசி யாத்திரைக்கு பின் மாலை 5:50 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க ஸ்தானிக குருக்கள் சுவாமி சார்பாக மாங்கல நாண் ஏற்றினார்.
பக்தர்கள் மீது அட்சதை தூவிய போது சிவ சிவ கோஷம் முழங்கப்பட்டது. சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. குங்குமம், மஞ்சள் கயிறு, தாம்பூலங்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இரவில் சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் புஷ்ப பல்லக்கிலும் வீதியுலா வந்தனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.