சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகை நாராயணப்பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை 5:30 மணிக்கு பெருமாள், கள்ளழகர் திருக்கோலத்தில் வெண்குதிரையில் எழுந்தருளினார். பின் காலை 9:11மணிக்கு வைகை ஆற்றில் பச்சைபட்டு உடுத்தி இறங்கினார். அழகர் வேடம் பூண்ட பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி அவரை குளிர்வித்தனர். ஏராளமான பக்தர்கள்அழகரை தரிசித்தனர். டி.எஸ்.பி., மோகன்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்றிரவு(ஏப்., 20) 9:00 மணிக்கு இரட்டை அக்ரஹாரம் கிருஷ்ணன் கோயில் அரங்கில் யாதவர்சங்கம் சார்பில் தசாவதாரம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் அலுவலர்கள் செய்தனர். அழகர் ஆற்றில் இறங்குமிடத்தில் பேரூராட்சி நிர்வாகம் சுகாதார முன்னேற்பாடுகளை முறையாக செய்யாததால் பக்தர்கள் அவதிக்குள்ளாயினர். பேரையூர் பழையூர் அழகர்கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது. இதையொட்டி அழகருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தன. சுவாமிக்கு நெல்மணி மாலை அணிவிக்கப்பட்டது. பின் சாப்டூர் காவல் நிலைய மண்டகபடியில் அழகர் எழுந்தருளினார். நேற்று பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் எழுந்தருளினார். பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோஷமிட்டு தீபாராதனை காட்டி வழிபட்டனர்.