பதிவு செய்த நாள்
20
ஏப்
2019
12:04
உடுமலை: உடுமலை, மாரியம்மன் கோவிலில், தேர்த்திருவிழாவுக்கு கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.உடுமலையில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில், தேர்த்திருவிழா நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக கொடியேற்றுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. காலை, 11:00 மணி முதல், கொடிக்கம்பத்துக்கு, சிறப்பு அபிேஷக அலங்கார பூஜை நடந்தது. கொடி கம்பத்துக்கு, மஞ்சள் ஆடை சுற்றி, மாலை அணிவித்து சிறப்பு வழிபாடு நடந்தது.பூஜைவின் நிறைவாக, பகல், 12:30 மணிக்கு, கொடியேற்றப்பட்டு, பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்பட்டது.
முகூர்த்தக்கால் நடுதல்: பக்தர்கள் திரளாக வந்திருந்து, கொடியேற்றுதலை வழிபட்டனர். தொடர்ந்து, வரும் 24ம்தேதி நடக்க உள்ள அம்மன் திருக்கல்யாண வைபவத்தையொட்டி, முகூர்த்தக்கால் நடப்பட்டது. மதியம், 2:00 மணிக்கு, பூவோடு நிகழ்வு துவங்கியது. மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி, கோவில் வளாகத்தில், அடிஅளப்பது மற்றும் அடிவிழுந்து வழிபடும் வேண்டுதல்களை நிறைவேற்றும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. நாள்தோறும், மாலை, 7:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது. நேற்று, காமதேனு வாகனத்தில், மலர் அலங்காரத்துடன் அம்பாள், திருவீதி உலா நடந்தது. திருவிழாவையொட்டி, இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
இன்று, மாலை, அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் யானை வாகனத்தில் திருவீதி உலா நடக்கிறது.குட்டைதிடலில் இன்று, இரவு, 10:00 மணிக்கு இன்னிசை பட்டிமன்றம், நடக்கிறது.கோவில் கலையரங்கில், மாலை, 6:00 மணிக்கு பரதநாட்டியம் மற்றும் தேவரா இசை நிகழ்ச்சி நடக்கிறது. பூவோடு, ஏப்., 23ல் நிறைவடைகிறது.திருக்கல்யாண உற்சவம், 24ம்தேதி, மாலை, 4:00 மணிக்கும், மறுநாள், திருத்தேரோட்டமும் கோலாகலமாய் நடக்கிறது.