பதிவு செய்த நாள்
20
ஏப்
2019
12:04
சின்னாளபட்டி: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. முன்னதாக, மூலவருக்கு திரவிய அபிஷேகம் நடந்தது. வெற்றிலை, துளசி, வெண்ணெய் காப்பு அலங்காரத்துடன் விசஷே பூஜைகள் நடந்தது.
சின்னாளபட்டி ராம அழகர் கோயில் சித்திரை திருவிழா, இரு வாரங்களுக்கு முன் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான, சித்ரா பவுர்ணமி விழா நேற்று நடந்தது. இதில், காந்திகிராமம் சஞ்சீவி நதியில், வெண்பட்டு உடுத்தி ராம அழகர் இறங்கினார். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
கன்னிவாடி: கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், ஓம்கார விநாயகர், மூலவர், நந்திக்கு வேதி தீர்த்த அபிஷேகம் நடந்தது. மூலவருக்கு அன்னக்காப்பு, நாகாபரண அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிவசக்தி, பஞ்ச பூதங்கள், எட்டு திசைகள், 15 திதிகள், நவக்கிரகங்கள், 18 சித்தர்களுக்கான திருமறை வழிபாடு நடந்தது. தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், அம்மனுக்கு திருமஞ்சன அபிஷேகம் நடந்தது. ராஜ அலங்காரத்துடன் பவுர்ணமி மகா தீபாராதனை நடந்தது. காளிங்க நர்த்தன கிருஷ்ணர், யோக ஆஞ்சநேயர், போகர், கோட்சார நவக்கிரகங்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு விசஷே பூஜைகள் நடந்தது. கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், மூலவர், உற்சவர், நந்திக்கு 30 வகை அபிஷேகம் நடந்தது. உற்ஸவருக்கு ராஜ அலங்காரத்துடன் உள்பிரகார வலம் நடந்தது.
சித்தையன்கோட்டை காசி விசுவநாதர் கோயில், பித்தளைப்பட்டி அண்ணாமலையார் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், காரமடை ராமலிங்கசுவாமி கோயிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
மண்டூக முனிவருக்கு வரம் : வடமதுரை சவுந்தரரராஜப் பெருமாள் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா நேற்று துவங்கியது. கோயிலில் இருந்து குதிரை வாகனத்தில் புறப்பட்ட பெருமாள் சுவாமி, பால்கேணி சென்று மண்டூக முனிவருக்கு வரமளித்தார். இதனை தொடர்ந்து வடமதுரை நகருக்குள் சென்று பல்வேறு திருக்கண்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருக்கண்களில் எழுந்தருளும் நிகழ்ச்சிகள் நாளை (ஏப்.21) இரவு வரை நடைபெறும். ஏப்.22 காலை சுவாமி சன்னதி திரும்புவார். விழா ஏற்பாட்டினை தக்கார் மகேஸ்வரி, செயல் அலுவலர் நாராயணி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
பட்டிவீரன்பட்டி மருதாநதியில் அழகர்: சித்தரேவு வரதராஜப் பெருமாள் கோயிலில் பெருமாள், பூமாதேவி திருக்கல்யாணம் ஏப்.17 ல் நடந்தது. நேற்று முன் தினம் இரவு 11:00 மணிக்கு அய்யம்பாளையம் மருதாநதியில் இறங்குவதற்காக கோயிலில் இருந்து பெருமாள் குதிரை வாகனத்தில் புறப்பட்டார். நேற்று அதிகாலை 6:00 மணியளவில் மருதாநதியில் இறங்கினார். தொடர்ந்து யாதவர் குல எதிர்சேவை நடந்தது. இன்று தசாவதாரம் நடக்கிறது. நாளை ஆஞ்சநேயர் வாகனத்தில் அய்யம்பாளையத்தில் ஊர்வலம் வருகிறார். இரவில் பெரிய முத்தாலம்மன் கோயிலில் தங்கி பக்தர்களுக்கு தரிசனம் வழங்குகிறார். ஏப். 22ல் அய்யம்பாளையம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் இருந்து சித்தரேவு கோயிலுக்கு புறப்படுகிறார். . தக்கார் கணபதிமுருகன், நிர்வாக அதிகாரி சந்திரசேகரன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.