பதிவு செய்த நாள்
22
ஏப்
2019
11:04
மாமல்லபுரம்: மாமல்லபுரம் பிரம்மோற்சவத்தில், சுவாமி தீர்த்தவாரி உற்சவம் கண்டார். இக்கோவிலில், 12ல் துவங்கிய, சித்திரை பிரம்மோற்சவ விழா, இன்று நிறைவடைகிறது. தினமும், காலை, இரவு உற்சவங்கள்; 17ல் கருடசேவை, 19ல் திருத்தேர் என நடந்தது.
நேற்று முன்தினம், இரவு, சுவாமி வீதியுலா சென்றபோது, திருமங்கையாழ்வார், சுவாமியின் ஆபரணங்களை களவாடி, மெட்டியை கழற்ற முயன்று, சுவாமி அருளாசியால் தெளிவடைந்து, திருமொழி பாடினார். ஆபரணங்கள் இன்றி, கோவில் வந்த சுவாமியிடம், தேவியர், ஆபரணம் குறித்து கேட்டு, தகராறு செய்து, வேடுபரி உற்சவம் நடந்தது. நேற்று காலை, சுவாமி, பல்லக்கில் வீதியுலா சென்று, காணாமல் போன ஆபரணங்களை, வீதியில் தேடினார். அவர் போர்த்திய போர்வையை ஒன்பது முறை களைந்து சோதித்து, பின், கோவிலை அடைந்து, திருமங்கையாழ்வார், சுவாமி, தேவியரை சமாதானம் செய்தார். அதை தொடர்ந்து, சக்கரத்தாழ்வார் திருமஞ்சன வழிபாடு நடந்து, சுவாமி, தேவியருடன் புண்டரீக புஷ்கரணி திருக்குளம் சென்று, சக்கரத்தாழ்வார் குளத்தில் மூழ்கி, தீர்த்தவாரி கண்டார்.