பதிவு செய்த நாள்
22
ஏப்
2019
12:04
திருத்தணி: ராமர் கோவிலில், ராமநவமியையொட்டி, திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
திருத்தணி ஒன்றியம், சின்னகடம்பூர் – மோட்டூர் கிராமத்தில், ராமர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் ராமநவமி விழா, 11 நாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், 11ம் தேதி ராமநவமி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, கோவில் வளாகத்தில், சிறப்பு கொலு அமைக்கப்பட்டது. தினமும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவில், கொலுவிற்கு, சிறப்பு பூஜைகள் மற்றும் பஜனை குழுவினரால் பக்தி பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன. விழாவின், 11ம் நாளான நேற்று காலை, ராமர் – சீதா திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதில், உற்சவருக்கு திருக்கல்யாணம் நடத்தி வைக்கப்பட்டது. இரவு, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, கிராமம் முழுவதும் வீதியுலா வந்து, பக்தர் களுக்கு அருள்பாலித்தார்.