பதிவு செய்த நாள்
22
ஏப்
2019
12:04
கோவை: விநாயகபுரத்தில் உள்ள ஸ்ரீசிவவிஷ்ணு கோவிலில், ஆதிசிவபெருமானுக்கும், மகா நந்தி தேவருக்கும் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இன்று, அருணாசலேஸ்வரர், வெங்கடாஜலபதிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. கணபதி, ராமகிருஷ்ணாமில் -விளாங்குறிச்சி ரோடு, விநாயகபுரம், சிவராம் நகரில் அமைந்துள்ளது, ஸ்ரீசிவவிஷ்ணு கோவில். கோவிலில், கடந்த நான்காண்டுகளாக திருப்பணி நடந்தது.
இதில், 5 அடி உயரத்தில், அருணாசலேஸ்வரர், 7 அடி உயர விநாயகர், 5.5 அடி உயர வெங்கடாஜலபதி மற்றும் 5 அடி உயர சண்முகநாதருக்கு, தனித்தனி சன்னதிகள் கட்டப்பட்டுள்ளன. இத்துடன், 22 அடி உயர ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட ஆதிசிவன், 11 அடி உயர நந்தி தேவர் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.ஆதிசிவன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு கும்பாபிஷேக விழா, கடந்த 18ம் தேதி துவங்கியது. 19ம் தேதி, 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள், நடராஜப்பெருமானுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. 20ம் தேதி விமான கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.நேற்று காலை, ஆதிசிவபெருமானுக்கும், மகா நந்தி தேவருக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து, பக்தர்கள் தங்கள் கைகளாலேயே தீர்த்தாபிஷேகம் செய்தனர். இன்று காலை, 7:00 மணிக்கு, ஆறாம் கால வேள்வியும், காலை, 9:00 மணிக்கு, அருணாசலேஸ்வரர் மற்றும் கலசங்கள் புறப்பாடும் நடக்கிறது. காலை, 9:30 மணிக்கு, மூலவர் விமானம், வெங்கடாஜலபதி, சண்முகநாதருக்கு மகா கும்பாபிஷேகமும், தொடர்ந்து, அருணாசலேஸ்வரருக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.