பதிவு செய்த நாள்
22
ஏப்
2019
12:04
பொன்னேரி: சித்திரை பிரம்மோற்சவத்தின், மூன்றாம் நாளில் கரிகிருஷ்ண பெருமாள், அனுமன் வாகனத்தில் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பொன்னேரி, திருவாயற்பாடியில் உள்ள சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில், கடந்த, 19ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை பிரம்மோற்சவ விழா துவங்கியது.
தங்கமுலாம் தொட்டி, சிம்ம வாகனம், சூரியபிரபை, சந்திரபிரபை ஆகிய உற்சவங்கள் தொடர்ந்து நடைபெற்றன. பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாளான நேற்று காலை, 7:30 மணிக்கு,, அனுமன் வாகனத்தில் உற்சவ பெருமான் மாடவீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெருமாளின் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள், வணங்கி சென்றனர். வெயில் சுட்டெரிப்பதால், வாகனங்களை துாக்கி செல்லும் பக்தர்களின் வசதிக்காக, பெருமாள் வீதியுலா நடைபெறும் மாடவீதிகளின் தண்ணீர் தெளித்து சாலைகள் குளிர வைக்கப்பட்டன. இன்று, சஷே வாகனம் மற்றும் அன்ன வாகன உற்சவங்களும், நாளை நள்ளிரவு, அரியும் அரனும் சந்திக்கும் சந்திப்பு திருவிழாவும் நடைபெற உள்ளன.