பதிவு செய்த நாள்
22
ஏப்
2019
01:04
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், தங்கத்தேரின் கலசம் உடைந்து விழுந்ததில், தேரின் பின்னால் வந்து கொண்டிருந்த ஒருவர் காயமடைந்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், 16 அடி உயர தங்கத்தேர் புதியதாக செய்யப்பட்டு, 2006 மார்ச், 16 முதல் இயக்கப்பட்டு வந்தது. கோவில் கும்பாபிஷேக பணிக்காக கடந்த, 2015 ஜனவரியில் நிறுத்தப்பட்டது. நீண்ட நாட்களாக இயக்கப்படாமல் தேர் நிறுத்தி வைக்கப்பட்டதால் பழுதடைந்தது. பக்தர்களின் கோரிக்கையால் தேர் பழுது பார்க்கப்பட்டு கடந்த பிப்.,14ல், மீண்டும் இயக்கப்பட்டது. தேரை, பக்தர்கள் கட்டணம் செலுத்தி, மூன்றாம் பிரகாரத்தில் இழுத்து சென்று வழிபாடு நடத்தி வந்தனர்.
நேற்று காலை, 9:30 மணிக்கு மெ.க. அன்னசத்திரத்தை சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் சார்பில், தங்கத்தேர் வழிபாடு நடத்தப்பட்டது. அப்போது, கோவில் வளாகத்தில் இருந்த மின்ஒயரில் தங்கத்தேரின் கலசம் சிக்கி, உடைந்து கீழே விழுந்தது. அப்போது, தேரின் பின்னால் வந்த, பசுங்கரை கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன், 24, என்பவர் மீது, கலசம் விழுந்ததில் மயக்கமடைந்தார். அவரை, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் விசாரித்து வருகின்றனர்.