பதிவு செய்த நாள்
23
ஏப்
2019
11:04
அலங்காநல்லூர்: பாலமேடு சாத்தையாறு அணை அருகே கல்லுமலை கந்தன் கோயிலில் சித்திரை திருவிழாவில் விளைபொருட்கள் செலுத்தி விவசாயிகள் வழிபட்டனர். அங்குள்ள விநாயகர், கந்தன், ராமலிங்கசுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. பக்தர்கள் உப்பு, மிளகு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திகடன்களை செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை வைகாசிபட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.
பக்தர்கள் கூறியதாவது: சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் விவசாயம் பாதித்தது. இதனால் அதிக மழை பெய்து, அமோக விளைச்சல் கிடைக்க வேண்டி விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த மா, புளி, கொய்யா, காய்கறி, பழங்கள், தானியங்கள் உள்ளிட்ட விளை பொருட்களை காணிக்கையாக செலுத்தினர். தொடர்ந்து மழை பெய்து சாத்தையாறு அணை உட்பட இப்பகுதி கண்மாய்கள், குளங்கள் நிரம்ப வேண்டி பக்தர்கள் சார்பாக நீர் மோர் வழங்கப்பட்டது என்றார்.