வடமதுரை : வடமதுரை மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழியில் இறங்கிநேர்த்திக்கடன் செலுத்தினர். கடந்த ஏப்.6-ல் பூத்தமலர் பூச்சொரிதலுடன் துவங்கிய திருவிழாவில் நாள்தோறும் மண்டகப்படிதாரர் சார்பில் கலை நிகழ்ச்சிகளும், அலங்கார ரதத்தில் அம்மன் வீதியுலாவும் நடந்தது. ஏப்.14ல் அம்மன் சாட்டுதலும், ஏப்.16 முதல் ஏப்.20 வரை அம்மன் ஊர் விளையாடல் நிகழ்ச்சியும் நடந்தது.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி மங்கம்மாள்கேணி மைதானத்தில் நேற்றுமுன்தினம் இரவு 12:15 மணியளவில் துவங்கியது.
காப்பு கட்டி விரதமிருந்த சிறுவர், சிறுமியர் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பூக்குழி இறங்கினர். நேற்று காலை அக்கினிச்சட்டி, மாவிளக்கு எடுத்தல், கொலு, பொங்கல்வைத்தல் வழிபாடுகள் நடந்தன. இன்று மாலை முளைப்பாரி எடுத்தல், மஞ்சள் நீராடுதலுடன் திருவிழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை தக்கார் கணபதிமுருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.