பதிவு செய்த நாள்
23
ஏப்
2019
03:04
காஞ்சிபுரம்:அத்தி வரதர் வைபவம் நடத்த, தேவையான முன்னேற்பாடுகள் குறித்து, கலெக்டர், பொன்னையா தலைமையில், நேற்று (ஏப்., 22ல்), ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
காஞ்சிபுரத்தில், பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம், வரும் ஜூலை மாதம் நடத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்துஉள்ளது.இந்து சமய அறநிலையத் துறையும், இதற்கான ஏற்பாடுகளை துவக்கி உள்ளது.இந்த விழாவுக்கான முன்னேற்பாடுகள் தொடர் பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட கலெக்டர், பொன்னையா தலைமையில், நேற்று (ஏப்., 22ல்), காலை, 11:00 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
அத்தி வரதர் வைபவத்திற்கு பல லட்சம் பேர் வருவர் என்பதால், அதற்கான முன்னேற் பாடுகளை எப்படி செய்யலாம்.விழாவுக்கான இட வசதி, போக்குவரத்து, பார்க்கிங், மின்வசதி, குடிநீர், சுகாதாரம் சம்பந்தமான அனைத்து வகையான தேவைகள் குறித்து, ஆலோசிக்கப் பட்டது.இதில், வரதராஜ பெருமாள் கோவில் செயல் அலுவலர் தியாகராஜன், நகராட்சி ஆணையர் மகேந்திரன், நகராட்சி சுகதார அலுவலர் முத்து, சுகாதாரத் துறை துணை இயக்குனர் செந்தில்குமார், கோவில் அதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர்.இவ்விழா தொடர்பான அடுத்தக்கட்ட கூட்டம், அடுத்த சில நாட்களில் நடைபெறும் என, தெரிகிறது.