பதிவு செய்த நாள்
24
ஏப்
2019
10:04
கோவை: சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோவை தண்டுமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தீசட்டி மற்றும் சக்திகரகம் ஏந்தி அம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்தினர்.
தண்டுமாரியம்மன் கோவில் தீச்சட்டி ஊர்வலத்தை முன்னிட்டு, இன்று போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை, 6:00 மணிக்கு துவங்கும் ஊர்வலம், டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, லிங்கப்ப செட்டி வீதி, பால் மார்க்கெட், புரூக்பாண்ட் ரோடு, சோமசுந்தரம் ரோடு வழியாக நஞ்சப்பா ரோட்டை அடைந்து தண்டு மாரியம்மன் கோவிலை சென்றடைகிறது.
போக்குவரத்தில் மாற்றம்: தீச்சட்டி ஊர்வலத்தை முன்னிட்டு இன்று காலை, 6:00 முதல் மதியம், 12:00 மணி வரை, பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் உக்கடத்தை அடைந்து ஒப்பணக்கார வீதிக்குள் செல்லாமல், வாலாங்குளம் பைபாஸ் வழியாக சுங்கம் அல்லது பேரூர் பைபாஸ் ரோடு வழியாக வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
மேட்டுப்பாளையம் மற்றும் தடாகம் ரோட்டிலிருந்து பாலக்காடு செல்லும் அனைத்து வாகனங்களும், பொன்னையராஜபுரம், சொக்கம்புதுார், சிவாலயா தியேட்டர் சந்திப்பு, பேரூர் பைபாஸ் வழியாக உக்கடம் செல்ல வேண்டும்.
பேரூர் ரோட்டிலிருந்து நகருக்குள் வரும் வாகனங்கள் சிவாலயா தியேட்டர் சந்திப்பு, சொக்கம்புதுார், பொன்னையராஜபுரம், தடாகம் ரோடு வழியாக காந்திபார்க் அல்லது பேரூர் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் செல்லலாம்.
அவிநாசி ரோடு பழைய மேம்பாலம் வழியாக உக்கடம் செல்லும் அனைத்து வாகனங்களும், அண்ணாசிலை சந்திப்பு அல்லது ஜே.எம்., பேக்கரி சந்திப்பிலிருந்து இடது புறம் திரும்பி ஒசூர் ரோடு, ரேஸ்கோர்ஸ் வழியாக அல்லது ரயில்வே ஸ்டஷேன் வழியாக திருச்சி ரோட்டை அடைய வேண்டும். திருச்சி ரோட்டிலிருந்து டவுன்ஹால் வழியாக, உக்கடம் செல்லும் வாகனங்களில் கனரக வாகனங்கள் கிளாசிக் டவர் வழியாக சுங்கம் பைபாஸ் அடைந்தும், இலகுரக வாகனங்கள் வின்சென்ட் ரோடு வழியாகவும், உக்கடம் அடைந்து வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.காலை 6:00 மணி முதல், ஊர்வலம் முடியும் வரை அவிநாசி ரோடு மற்றும் ஊர்வல பாதை உள்ள பகுதிகளில் லாரிகள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு, மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.