பதிவு செய்த நாள்
24
ஏப்
2019
12:04
திருப்புத்துார்: சப்த மாதாக்களின் சங்கமம் திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா ‘சப்த மாதாக்களின் சங்கமம் பூமாயி குங்குமம் சர்வ மங்களம் எங்கும் அற்புதம் சரணடைவோம் அவள் பொற்பாதம்’சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் புராண,வரலாறு, ஆன்மிக சிறப்புகள் நிறைந்த பாடல் பெற்ற தலமாகும்.
ஆன்மிக புருஷர்கள் தவமிருந்த கொன்றை வனமாக முன்பு இருந்துள்ளது. திருவிளையாடல் நடைபெற்ற பூமி, இறைவிக்காக இறைவன் ஆடல் கண்ட தலம். இத்தலத்தின் தென் எல்லை தெய்வமாக வீற்றிருக்கிறார் பூமாயி அம்மன். பூமாயி அம்மன் கோயிலில் சப்தமாதாக்கள் என அழைக்கப்படும் பிராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, மகேந்திரி, சாமுண்டி, ஆகிய அன்னை எழுவரும் ஒரே இடத்தில் எழுந்தருளியுள்ளனர். நடுநாயகமாக உள்ள அன்னை வைஷ்ணவி பூமாயி அம்மனாய் அருள்பாலிக்கிறார். இக்கோயிலின் தீர்த்தமாக திருக்குளமும், நவக்கிரக சன்னதி அருகேயுள்ள கிணறும் உள்ளது. இக்கோயிலில் பூச்சொரிதல் விழா, வசந்தப் பெருவிழா, நவராத்திரி விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பூச்சொரிதல் விழா: இன்று அதிகாலை பூமாயி அம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்து விழா துவங்கும். நகரின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பூத்தட்டுடன் வந்து அம்மனை பூக்களால் வழிபடுவார்கள்.பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு பாலாபிேஷகம் நடைபெறும். இரவு முழுவதும் பக்தர்கள் வழிபாட்டிற்கு கோயில் நடை திறந்திருக்கும். நாளை அதிகாலை 4:00 மணிக்கு மேல் 5:00 மணிக்குள் அம்மனுக்கு புஷ்ப அலங்காரம், செய்யப்பட்டு பூச்சொரிதலும், விசேஷ தீபாராதனையும் நடைபெறும். இன்று இரவு நகரெங்கும் ஆடல்,பாடல்,இசைக் கச்சேரிகள் நடைபெறும். தொடர்ந்து வசந்தப் பெருவிழா துவங்குகிறது.