பதிவு செய்த நாள்
26
ஏப்
2019
12:04
பொன்னேரி:கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்வசத்தினை முன்னிட்டு நடந்த தேர் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரின் வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.
பொன்னேரி, திருவாயற்பாடியில் உள்ள சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவின், 7ம் நாளான நேற்று, தேர் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. மரத்தேரில், பூதேவி, ஸ்ரீதேவி சமேதயராய் கரிகிருஷ்ண உற்சவ பெருமான் வீற்றிருந்தார்.காலை, 10:00 மணிக்கு நிலையில் இருந்து புறப்பட்ட தேர், தேரடி தெரு, தாயுமான் செட்டி தெரு, நீலியப்பா முதலி தெரு, தண்டபாணி நாடார் தெரு, அதாவுல்லாஷா தெரு மற்றும் அரிஅரன் பஜார் வீதி வழியாக தேரோட்டம் நடந்தது.இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று, தேரின் வடம்பிடித்து இழுத்து, பெருமானை நெஞ்சுருக வழிபட்டனர். மாலையில் நடந்த தேர்மண்டகப்படி நிகழ்ச்சியிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தேர் நிறுத்தப்பட்டுள்ள கட்டடத்தின் வழியாக சென்று, கரிகிருஷ்ண பெருமானை தரிசித்து சென்றனர்.பொன்னேரி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நடந்த தேர் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர், மோர் ஆகியவை வழங்கப்பட்டன. காவல் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.