அன்பர்கள் விரதமிருந்து, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருமலை, திருக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மலை, பன்னிப்பாக்கம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு, திருநட்டாலம் ஆகிய ஊர்களிலுள்ள பன்னிரண்டு சிவன்கோயில்களில் சிவராத்திரி நாளில் தரிசிப்பதை சிவன்கோயில் ஓட்டம் என்பர். கோவிந்தர்கள் என்று அழைக்கப்படும் இந்த பக்தர்கள் மாசி சிவராத்திரிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே விரதம் மேற்கொள்கின்றனர். பகலில் இளநீர், நுங்கு ஆகியவற்றையும்; இரவில் துளசியிலைத் தண்ணீரையும் <உட்கொள்வர். வேக வைத்த பதார்த்தங்களை உண்பதில்லை. இவர்கள் விசிறி, சிறிய பணமுடிப்பு, மின்விளக்கு (டார்ச்) ஆகியவற்றை ஏந்தியவாறு ஒரு குருசாமியின் தலைமையில் ஆயிரக்கணக்கானவர்களாகப் பயணத்தைத் துவங்குகின்றனர்.
இந்த பன்னிரு சிவன்கோயில்களில் முதன்மையானது திருமலைமகாதேவர் கோவிலாகும். சிவன் கோயில் யாத்திரை முடிந்த பின்னர் பெரும்பாலான பக்தர்கள் சுசீந்திரம் சென்று வழிபடுவர். இச்சிவன் கோயில் ஓட்டத்தின் மொத்த தூரம் 70 கிலோமீட்டர் ஆகும். இப்பயணத்தின்போது கோவிந்தா, கோபாலா என்று அழைத்துக் கொண்டே ஓடுகின்றனர். ஒருவரை ஒருவர் கோவிந்தா என்றே குறிப்பிட்டு அழைக்கின்றனர். இவ்வாறு சிவபக்தர்கள் திருமாலின் பெயரான கோவிந்தா என்று கூறியழைக்கும் வழக்கம் சைவவைணவ ஒற்றுமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். சிவன்கோயில் ஓட்டம் பற்றி எவ்வித வரலாற்றுச் சான்றும் இல்லையெனினும், கி.பி. 9 அல்லது 10ஆம் நூற்றாண்டில் இவ்வழக்கம் தோன்றியிருக்கலாம் என்று கருதுகின்றனர். நாஞ்சில் நாட்டில் பெருகியிருந்த சமணர் செல்வாக்கைக் குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, சைவர்களும் வைணவர்களும் ஒன்றுபட வேண்டும் என்ற நோக்கத்தில் இது தோற்றுவிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இப்போது தொன்றுதொட்டு நடந்துவரும் இந்த சிவன்கோயில் ஓட்டத்தை கவனத்திற்கொண்டு சில அமைப்புகள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடத்தி வருகின்றன.