குரு ஒருவரை சந்தித்த பக்தன் ஒருவன், சுவாமி! எனக்கு மன அமைதி இல்லை. அதைப் பெறுவதற்கு ஒரு வழிச் சொல்லுங்கள்! என்று வேண்டினான். புன்னகைத்த குரு, அமைதி இல்லை என்று நினைப்பதற்குக் காரணமே உன் மனம்தான் எண்ணங்கள் அடங்கினால் மனம் ஒடுங்கும். மனம் ஒடுங்கினால் உன் ஆத்ம சொரூபம் பளிச்சென்று தெரியும். எனவே எண்ணங்களைத் துரத்திக் கொண்டு அதன் பின்னால் ஓடாமல், அவை எங்கிருந்து பிறக்கின்றன என்று சிந்தனை செய். அதுவே தியானம், யோகம் எல்லாம் எண்ணங்களின் மூலத்தைக் கண்டுபிடித்தால் உனது உண்மையான தன்மை புரிந்து விடும். நீ யார்? என்பது விளங்கிவிடும். உன்னை உணர்ந்து கொண்டு விட்டால், பிறகு அமைதியையும் ஆனந்தத்தையும் தவிர ஒன்றுமே இருக்காது. என்றார்.