குருக்ஷேத்திரத்தில் நடந்த போரில், கவுரவர் அமைத்த வியூகத்தின் உள்ளே சென்ற அபிமன்யு, வெளிவரத் தெரியாமல் உயிர் நீத்தான். விஷயமறிந்த அர்ஜூனன், மகனுக்காக கண்ணீர் விட்டான். அப்போது, கிருஷ்ணரின் முகம் வாடியது. “உன் மருமகன் அபிமன்யு மாண்டதை எண்ணித்தானே பரம்பொருளான நீயும் வாடுகிறாய்!” என்றான் அர்ஜூனன். கிருஷ்ணர் சிரித்தார். “அர்ஜுனா! நான் அதற்காக வருந்தவில்லை. உன்னைப் போன்ற மூடனுக்கு கீதையை உபதேசித்ததை எண்ணியே வருந்துகிறேன். உடலுக்குத்தான் அழிவு, ஆன்மாவுக்கு அழிவில்லை என்று கீதை மூலம் உனக்கு எடுத்துச் சொன்னேன். உன் மகன் அபிமன்யு வீர சொர்க்கத்தில் தான் இருக்கிறான். ஆனால், நீ கலங்குகிறாய் அல்லவா! அதை எண்ணியே வாடினேன்,” என்றார் கிருஷ்ணர். உடனே, அர்ஜூனன் மகனை பார்க்கும் ஆவலில் கிருஷ்ணருடன் சொர்க்கம் புறப்பட்டான். அங்கு பொன் ஊஞ்சலில்அபிமன்யு ஆடிக் கொண்டு இருந்தான். ‘அபிமன்யு! அபிமன்யு!’ என்று கூவியபடி, கட்டியணைக்கச் சென்றான். அவனோ, “நீங்கள் யார்?” என அர்ஜூனனைக் கேட்டான். அப்போது கிருஷ்ணர், “போர்க்களத்தில் கிடக்கும் கட்டை தான் உன் மகன். பிறப்பும், இறப்பும் உடலுக்குத் தான் இருக்கிறது. ஆன்மாவுக்கு உறவுமில்லை. பகையுமில்லை என்பதை இப்போதாவது உணர்ந்து கொள்” என்று விளக்கம் அளித்தார்.