பதிவு செய்த நாள்
14
மே
2019
11:05
குருபகவான் மே18ல் அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இது சாதகமான இடம். அப்போது அவர் குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் வளம் காணலாம்.
11-ம் இடமான ரிஷபத்தில் இருக்கும் சூரியன் நற்பலன் கொடுப்பார். புதன் மே28 வரை நன்மை கொடுப்பார். சுக்கிரன் ஜூன்3க்கு பிறகு நற்பலன் தருவார். ராசிக்கு 12-ல் உள்ள ராகு, செவ்வாய் ஆகியோரால் எந்த நன்மையும் கிடைக்காது. ஆனால் 6-ம் இடமான தனுசு ராசியில் இணைந்திருக்கும் சனி,கேது நற்பலன்களைத் தருவர். உங்களுக்கு வரும் இடையூறுகள் அனைத்தும் முறியடித்து வெற்றிக்கு வழிவகுப்பார். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். ஆற்றல் மேம்படும்.
குடும்பத்தில் சூரியன், புதனால் பொருளாதார வளம் மேம்படும். சமூக மதிப்பு அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.
ஜூன் 3க்கு பிறகு சுக்கிரனால் மகிழ்ச்சி அதிகரிக்கும். சொந்தபந்தங்களின் வருகை இருக்கும். பெண்களால் பொன், பொருள் சேரும். கணவன், மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஜூன்2,3,4ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் மே16,17,18, ஜூன் 13,14ல் உறவினர் வகையில் சிறு பிணக்குகள் வந்து மறையும். ஜூன்7,8ல் சகோதரிகளால் அனுகூலம் கிடைக்கும். மே15, ஜூன்11,12ல் ஆடை, அணிகலன்கள் வாங்கலாம்.
அரசு ஊழியர்களுக்கு கோரிக்கை எளிதில் நிறைவேறும். புதன், சூரியன் சாதகமான இடத்தில் இருப்பதால் தனியார் துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேலைப்பளு சற்று குறையும். இடமாற்ற பீதி மறையும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். மே18க்கு பிறகு சகபெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். மே31, ஜூன்1ல் எதிலும் வெற்றி காணலாம். பணியிடத்தில் உங்களின் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
வியாபாரிகளுக்கு பணவரவுக்கு பஞ்சம் இருக்காது. தொழிலில் லாபம் அதிகரிக்கும் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். சனி, சூரியனால் பொருளாதார வளம் சிறக்கும். புதிய வியாபார முயற்சியில் ஈடுபடலாம்.
உங்களிடம் வேலைபார்ப்பவர்கள் நன்றியுடன் இருப்பர். அரசின் சலுகை கிடைக்கும். வங்கியில் விண்ணப்பித்த கடன் கிடைக்கும். ஜூன் 5,6,9,10ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். மே21,22,23ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கப் பெறுவர். பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் உண்டாகும். செவ்வாயால் அலைச்சல் ஏற்படலாம்.
கலைஞர்களுக்கு எதிரிகள் வகையில் இருந்த தொல்லை, முயற்சியில் இருந்த தடை முதலியன ஜூன்3க்கு பிறகு மறையும். அதன்பின் உங்களுக்கு சாதகமான காற்று வீசும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் சிறப்பான நிலையில் காணப்படுவர். மே19,20, ஜூன்15ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்களுக்கு புதன் சாதகமாக இருப்பதால் கல்வியில் சிறப்படைவர். ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம். குருவால் தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்க பெறுவர். விவசாயிகள் பசுவளர்ப்பு மூலம் வருமானம் காண்பர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும்.
பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பை பெறுவர். அண்டை வீட்டார் அனுகூலமாக செயல்படுவர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். புதிய பதவி தேடி வரும். சுய தொழில் புரியும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். மே15, ஜூன்11,12ல் பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப் பெறலாம். மே24,25ல் சிறப்பான பலன்களைக் காணலாம். விருந்து, விழா என சென்று வருவீர்கள். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர்.
உடல்நிலை சிறப்பாக இருக்கும். மே28க்கு பிறகு அக்கறை கொள்வது நல்லது.
* நல்ல நாள்: மே 15,21,22,23,24,25,31 ஜூன் 1,2,3,4,7,8,11,12
* கவன நாள்: மே 26,27,28 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1,3,7
* நிறம்: சிவப்பு, கருப்பு
பரிகாரம்:
● வெள்ளிக்கிழமையில் நாகதேவதை வழிபாடு
● தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் தரிசனம்
● புதன்கிழமையில் குலதெய்வத்திற்கு விளக்கு