பதிவு செய்த நாள்
14
மே
2019
03:05
காஞ்சிபுரம் : அறநிலையத் துறை கோவில்களில் உண்டியல் எண்ணிக்கையை, வழிபாட்டு நேரத்தில் மேற்கொள்ள வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்திஉள்ளனர். ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை, அவ்வப்போது எண்ணப்படுகின்றன. உண்டியல் எண்ணுவதற்கு, இணை ஆணையர் அனுமதி பெறவேண்டும்; அவர் உத்தரவிட்ட நாளில் எண்ண வேண்டும்.அதுபோல, பொது மக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முன்னிலையில் எண்ண வேண்டும் என, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதை கோவில் நிர்வாகங்கள் கடைப்பிடிப்பதில்லை என, குமரகோட்டம் முருகன் கோவில் முன்னாள் திருப்பணி குழு செயலர், வி. ரகு புகார் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது:அறநிலையத்துறை கோவில்களில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை வழிபாட்டு நேரத்தில் காலை,7:00 மணிக்கு திறந்து, மாலை, 6:00 மணிக்குள் முடிக்க வேண்டும் என, அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. எண்ணி முடித்த பின், எவ்வளவு வருவாய் என, பதிவேட்டில் குறிப்பட வேண்டும். அந்த நோட்டில் பொதுமக்களும், தொகை சரியானது தான் என, கையெப்பம் இட வேண்டும்.
இதை எந்த கோவிலிலும் முறையாக கடைப்பிடிப்பதில்லை. காஞ்சிபுரம் குமர கோட்டம் முருகன் கோவிலில், நேற்று முன்தினம் (மே., 12ல்) பகல், 12:30 மணிக்கு மேல் நடை சாற்றப்பட்ட பின், உண்டியல் திறந்து எண்ணப்பட்டு, இரவு வரை நடந்துள்ளது.மேலும், உண்டியல் எண்ணுவதற்கு உள்ளூர் வாசிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இனிமேலாவது, இவற்றை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
இது குறித்து, கோவில் செயல் அலுவலர், என். தியாகராஜன் கூறியதாவது:திருவள்ளூர் மாவட்ட அறநிலையத் துறை உதவி ஆணையர் முன்னிலையில் தான் திறக்க வேண்டியிருந்தது. அவர் வர தாமதம் ஆனதால், மதியம், 12:30 மணிக்கு திறந்து, எண்ணும் பணி நடந்தது; மாலையில் முடித்து விட்டோம். இவ்வாறு, அவர் கூறினார்.