ஒருமுறை இயேசு சீடர்களுடன் வெளியூர் சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு மரத்தடியில் இளைப்பாறிய போது, ஒரு மனிதன் உறங்கி கொண்டிருந்தான். அவனை எழுப்பி, தாங்கள் போகும் ஊருக்கு வழி கேட்டனர். அவன் எழவும் இல்லை, வாய் திறக்கவும் இல்லை. கண்ணை அரைகுறையாகத் திறந்து, கையை மட்டும் காட்டினான். அவர்களும் அவன் காட்டிய பாதையில் சென்றனர். சற்று தொலைவில் அந்தச் சாலை இரண்டாகப் பிரிந்தது. எந்த வழியில் செல்ல வேண்டும் என அவர்கள் யோசித்தபடி நின்றனர். அப்போது அங்கு வந்த ஒரு பெண் ஒருத்தி, ஊருக்கு எப்படி செல்ல வேண்டும் என்பதை தெளிவாக தெரிவித்தாள். “இந்தப் பெண் புத்திசாலியாகவும், பொறுமைசாலியாகவும், தெளிவாக பேசுபவளாகவும் இருக்கிறாள். இவளுக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என வாழ்த்துங்கள்” என்றனர் சீடர்கள்.
“மரத்தடியில் ஒருவன் தூங்கினானே, அவன் தான் இவளுக்கு கணவராக வருவான்” என்றார் அவர்.
“ ஆண்டவரே! போயும் போயும் அந்த சோம்பேறியா கணவனாக வேண்டும்! பாவமல்லவா!” என்றனர்.
“ இவளது சுறுசுறுப்பும், தெளிவும் காலப்போக்கில் அவனைத் திருத்தும். சுறுசுறுப்புள்ளவனாக மாறுவான்”என்றார். எல்லாவற்றையும் காரணத்துடனே கடவுள் செய்கிறார். இதையே ’காரணமில்லாத காரியமில்லை’ என்கிறது பழமொழி.