ராம பக்தரான தியாகராஜ சுவாமி வறுமையில் வாடினார். இதையறிந்த தஞ்சை மன்னர் சரபோஜி பொற்காசுகளை சன்மானமாக அனுப்பியதோடு, அரண்மனைக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார். விஷயம் அறிந்த தியாகராஜர், ’நிதி சால சுகமா?’ என்னும் கீர்த்தனை பாடினார். ’ராமன் என்னும் நிரந்தர சுகம்’ இருக்கும் போது பொற்காசுகள் எதற்கு? என்னும் பொருளில் அப்பாடல் இருந்தது. தேடி வந்த பணத்தை ஏற்காத தியாகராஜர் மீது அவரது சகோதரருக்கு கோபம் வந்தது. தியாகராஜர் பூஜிக்கும் ராமர் சிலையை ஆற்றில் வீசினார். மனம் வருந்திய தியாகராஜரின் கனவில் தோன்றிய ராமர், சிலை இருக்கும் இடத்தை தெரிவித்தார். குறிப்பிட்ட இடத்தில் சிலையை கண்டெடுத்த தியாகராஜர், ’கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் ராமனை’ என சொல்லி மகிழ்ந்தார்.