திருமகள் ஓரிடத்தில் நிலையாக இருப்பதில்லை. ஒருவரிடமே நிலையாக இல்லாமல் மாறி மாறிச் செல்வதால் பணத்திற்கு ‘செல்வம்’ என்ற பெயருண்டு. யாருக்கு எப்போது லட்சுமி வாழ்வு தருவாள் என்று யாராலும் கூற முடியாது. இதற்கு குருவாயூரப்பனே காரணம் என்கிறார் நாராயணபட்டத்ரி. “ஹே! குருவாயூரப்பா! உன் சொக்கவைக்கும் அழகில் நான் மயங்கிக் கிடக்கிறேன். செல்வமகளாகிய லட்சுமி உன்னால் கவரப்படுவதைக் கேட்பானேன்! அவளால் இவ்வுலகின் மீது சிறிதுநேரமே தன் அருட்பார்வையைச் செலுத்த முடிகிறது. அவளை அறியாமலே அவளின் கண்கள் உன்னழகைத் தேடத் தொடங்கி விடுகின்றன. அதனால் தான் உன் துணைவிக்கு சஞ்சலா, சபலா என்று பெயர்கள் உண்டாகிவிட்டன,” என்று கூறுகிறார். இந்தச் சொற்களுக்கு ‘ஓரிடத்தில் நில்லாதவள்’ எனப்பொருள்.