பதிவு செய்த நாள்
16
மே
2019
02:05
அவதாரங்கள் எண்ணற்கரியன. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முக்கிய மும்மூர்த்திகளும் பல உருவில் பன்முறை அவதரித்திருந்தாலும், பொதுவாக, அவதாரம் என்றவுடன் நாம் விஷ்ணுவையே நினைக்கிறோம். அவரின் முக்கியப்பத்து அவதாரங்களிலும் சில மட்டுமே புராணங்களிலும், இதிகாசங்களிலும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, ராமனையும், கிருஷ்ணனையும் போற்றுகின்ற அளவுக்கு பிற அவதாரங்கள் பாடப்படவில்லை. மேலும் வராக அவதாரம், மத்ஸ்ய அவதாரம், கூர்ம அவதாரம், வாமனஅவதாரம் போன்றவற்றின் அவதாரப் பணி சீக்கிரமே நிறைவேறி விடுவதால். அந்த அவதார மூர்த்திகட்கு, தனிக்கோயில், தனிச்சன்னதி அதிகமில்லை. பெரிய அளவிலான பெருமாள் ஆலயங்களில் கூட, எல்லோருக்குமாக சேர்ந்தே தசாவதார சன்னதி உள்ளது. சில கோயில்களில் மட்டுமே, மூலவர் சன்னதியோடு, பிற அவதார மூர்த்திகளுக்கு தனிச் சன்னதிகள் உள்ளன. அவற்றிலும் ராமர், கிருஷ்ணருக்கே அதிகமாக உள்ளன. மேலும், சுதர்சனர் (சக்கரத்தாழ்வார்) சன்னதியுள்ள ஆலயங்களில், சக்கரத்தாழ்வாரின் பின்புறம் நரசிம்மரின் உருவம் அமைக்கப்படுவதால், திருச்சுற்றில், நரசிம்மருக்கு தனிச்சன்னதி இருப்பது குறைவே. தனிச்சன்னதி ஏற்படுத்தும் போது, வடமேற்கு (வாயு) மூலையில் அமைப்பது வழக்கமாக உள்ளது.