துாத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான இக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா விமர்சையாக நடந்து வருகிறது.
இன்று முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரம் என்பதால் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இரவு முதல் பாதயாத்திரையாக குவிந்த பக்தர்கள் காவடி எடுத்தும், வேலால் அலகு குத்தியும், நேர்த்தி கடன் செலுத்தினர். வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.