பதிவு செய்த நாள்
18
மே
2019
11:05
காரியாபட்டி: ஒரு மனிதனுக்கு பொன், பொருள், சொத்துக்கள் என கோடி கோடியாய் பணம் இருந்தால்கூட கை, கால் சுகம் இருந்தால் போதும் என மனதளவில்தான் சொல்வார்களே தவிர, உடல் நிலையைப் பற்றி கவலைப்படாமல் மறுபடியும் ஓடிக் கொண்டேதான் இருப்பர். பாதிக்கப்பட்ட பின் வருத்தப்படுவர். அதற்கு சமுதாய சூழ்நிலையை காரணம் என சொன்னாலும் அந்தஸ்துக்காக வாழ்பவர்களே ஏராளம். எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தில் முடிவதால் மன அழுத்தம் ஏற்பட்டு கை, கால் செயல் இழந்து, வாய் பேச முடியாமல் படுத்த படுக்கையாய் நடமாட முடியாத நிலை ஏற்படுகிறது.
பெரும்பாலும் சக்திக்கு மீறி செலவு செய்தும் குணபடுத்த முடியாமல் வீண் அலைச்சல் ஏற்பட்டு அந்தஸ்தை இழந்து நொந்து போவர். இப்போது உள்ள சூழ்நிலையில் ஆங்கில மருத்துவம் தேவை என்றாலும், ஒரு சில வியாதிகளை இயற்கை முறை வைத்தியம் முற்றிலும் குணப்படுத்துகிறது. அதன்படி கை, கால் பாதிக்கப்பட்டவர்கள், வாய் பேச முடியாதவர்கள், பசி எடுக்காத, நடக்க முடியாதவர்களுக்கு காரியாபட்டி அருகே வையம்பட்டியில் 500 ஆண்டுகளுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக பாரம்பரிய மருந்து தேய்த்து குணப்படுத்தி வருகின்றனர். இதற்கு வெள்ளி, செவ்வாய் கிழமைகள் விஷேச நாட்களாக கருதப்படுகிறது.
மரத்தடியே போதும்: மருந்து தேய்த்து குணமாகவில்லை என்றால் இங்குள்ள ஜோசியரிடம் குறி கேட்க வேண்டும். அவர் குடும்பத்தில் செய்த கர்ம வினைகளை சொல்வார். அதை நிவர்த்தி செய்த பின் மருந்து தேய்க்க வேண்டும். அதற்கு பின்தான் குணமடையும். இது எல்லாம் தெய்வ வாக்குதான். குணமடைந்து கோயிலில் மஞ்சள் அறைத்து பூசி வழிபட்டும், குழந்தைகள் நடந்தால் தள்ளுவண்டியை நேர்த்திக் கடனாகவும் செலுத்துவர். எத்தனையோ பேர் இந்த கோயிலுக்கு கோபுரம் கட்டித்தர முன்வந்தும் தெய்வம் அதை ஏற்றுக் கொள்ளாது மரத்தடியே போதும் என்றதால்அப்படியே விட்டுள்ளனர்.
மகாராணி, வையம்பட்டி.
பத்தியம் கிடையாது: வைத்தியம் செய்பவர்களை போட்டோ எடுக்கக் கூடாது. காணிக்கையாக ரூ. 21 கொடுத்தால் போதுமானது. பத்தியம் கிடையாது. மருந்து தேய்க்கும் அன்று உடலில் தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இங்கு வந்தவர்கள் யாரும் குணமாகவில்லை என்று சொன்னதே கிடையாது. முக்கியமாக பிறப்பால் ஏற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த மருந்து வேலை செய்யாது. இடையில் நடந்த பிரச்னைகளுக்குத்தான் இந்த மருந்து பலன் கொடுக்கும்.
கஸ்துாரிபிரியா,வையம்பட்டி.
மூன்று வாரத்திலே சரியாகிறது: இந்த தெய்வத்துக்கு ஆண்டு தோறும் களரிக்கு ஏற்பாடு செய்து வழிபட்டபோது பாட்டையா என்பவருக்கு அருள் இறங்கியது. என்ன வரம் வேண்டும் என கேட்ட போது நம்மை நம்பி வருபவருக்கு கை, கால் சுகத்தை கொடுக்க வேண்டும் என சொல்ல அப்படியே நடக்கும் என் வாக்கு கொடுத்தது. அன்றிலிருந்து இன்று வரை அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள், கை, கால் பாதிக்கப்பட்டவர்கள், பசியின்மையை போக்கி பூரண குணபடுத்தி வருகின்றனர். எத்தனை தலைமுறை என்பது எங்களுக்கே தெரியாது. கேள்விப்பட்டு பல்வேறு ஊர்களிலிருந்து வந்து கொண்டே இருக்கிறார்கள். மூன்று வாரங்கள் வந்தாலே சரியாகி விடுகிறது. ராஜேந்திரன்,வையம்பட்டி.
தெய்வமாக சிறுமி: 500 ஆண்டுகளுக்கு முன் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் விவசாயம் பார்த்துக் கொண்டிருந்தனர். கால்நடைகள் மேய்ந்து விடக் கூடாது என்பதற்காக பரணி கட்டி காவல் காத்தனர். அப்போது வையம்மாள் எனும் சிறுமி அவரது பெரியப்பாவிடம் ‘‘உங்கள் ஆடு, எங்கள் காட்டில் மேய்ந்து கொண்டிருக்கிறது உடனே விரட்டுங்கள் ’’என தெரிவித்ததால் அவர் மனம் நொந்து, தம்பி மகள் இப்படி பிரித்து பேசி விட்டதே என வருத்தப்பட்டார். சிறிது நேரத்தில் அங்கிருந்த சிறுமி வயிற்று வலியால் துடித்து பரணியிலிருந்து தவறி விழுந்து இறந்து விடுகிறது. பின்னாளில் அச்சிறுமி ஒரு மரத்தில் தெய்வமாக காட்சி அளித்து ‘‘எனது பெரியப்பாவை மனம் நோக வைத்துவிட்டேன் என வருந்தி, என் மக்களுக்கு காவல் தெய்வமாக இருப்பேன்’’ என கூறி மறைந்ததால் தற்போது அந்த மரத்தையே சிறுமியை தெய்வமாக பூஜித்து வருகின்றனர். இதுவரை இந்த மரம் என்ன வகை மரம் என யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை .
ஜெயகிருஷ்ணன், வையம்பட்டி.