மானாமதுரை: தமிழகத்தில் தற்போதுள்ள நாகரீக மோகத்தில் தமிழர்களின் பண்டைய கலாசாரம், திருவிழாக்கள் மெல்ல, மெல்ல அழிந்து வருகின்றன.
கிராமங்களில் இருந்து மக்கள் நகரங்களுக்கு இடம் பெயர்தலும் கூடிக்கொண்டே வருகின்றது. இதனால் கிராமங்களில் நடக்கும் பாரம்பரிய திருவிழாக்கள் மற்றும் அறிவியலோடு தொடர்புடைய வழிபாடுகள் மற்றும் பல கலாசார நிகழ்வு குறைந்து கொண்டே வருகின்றன.
இதனை மீட்டெடுக்கும் வகையில் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் மாணவ சமுதாயத்தினர் பண்டைய கலாசாரத்தை விளக்கும் விழாக்கள் குறித்து நகர் மக்களிடம் எடுத்து கூறி காக்க வேண்டுமென தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த 50 வருடங்களுக்கு முன்பெல்லாம் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மழை வேண்டியும், ஊர் ஒற்றுமையாக இருக்க வேண்டியும் கிராமங்களில் ஜாதி, மதம் பார்க்காமல் அனைவரும் ஒன்று சேர்ந்து மண்ணால் ஆன குதிரை, காளைகள், சாமி உருவங்கள் செய்து அதனை ஊர்வலமாக கொண்டு வந்து ஊரில் இருக்கும் காவல் தெய்வ கோயிலில் வைத்து வழிபடுவதால் வருடந்தோறும் தவறாமல் மழை பெய்து பூமி செழித்து நன்றாக விவசாயம் நடைபெற்றதாக முன்னோர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய நாகரீக காலத்தில் தற்போது பெரும்பாலான கிராமங்களில் இதனை யாரும் பின்பற்றுவது கிடையாது.மானாமதுரை பகுதியில் உள்ள ஒரு சில கிராமங்களில் இன்றளவும் வருடந்தோறும் ஊரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வாரி விதித்து மொத்தமாக சேர்ந்து செலவு செய்து குதிரை எடுப்பு திருவிழாவை நடத்தி வருகின்றனர். அன்றைக்கு அவரது உறவினர்கள் அனைவரையும் தங்களது கிராமத்திற்கு அழைத்து அவர்களுக்கு விருந்து அளித்து வருகின்றனர்.
இதனால் ஊரில் ஒற்றுமை நிலவுவதாகவும், கிராமம் செழிப்பாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.