திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
கோயில் வைகாசி விசாக திருவிழா மே 9ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று (மே., 17ல்) பகல் 3:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது.
ஆதிரெத்தினேஸ்வர் பிரியாவிடையுடன் அமர்ந்த தேரையும், சிநேகவல்லி அம்மன் அமர்ந்த மற்றொரு தேரையும் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் மாலை 6:00 மணிக்கு நிலையை சென்றடைந்தது. பின்பு சுவாமி தேர் தடம் பார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் சார்பில் பக்தர்களுக்கு நீர், மோர் வழங்கப் பட்டது. இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை தேவஸ்தான செயல் அலுவலர் புவனேஸ்குமார் மற்றும் 22 கிராமத்தினர் செய்திருந்தனர்.