பதிவு செய்த நாள்
20
மே
2019
11:05
காஞ்சிபுரம் : வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில், நேற்று காலை, கருட சேவை உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம், வெள்ளிக்கிழமை துவங்கியது. இவ்விழாவின் முக்கிய உற்சவமான கருடசேவை, நேற்று அதிகாலை, 4:57 மணிக்கு நடைபெற்றது.பெருமாள், கருட வாகனத்தில் எழுந்தருளி, சன்னிதி தெரு, விளக்கொளி பெருமாள் கோவில் தெரு, தாயார்குளம் தெரு வழியாக பிள்ளையார்பாளையம் சென்றார்.அங்கிருந்து கிருஷ்ணன் தெரு, புத்தேரி தெரு வழியாக கச்சபேஸ்வரர் கோவில் முன் எழுந்தருளினார். அங்கு, குடை மாற்றிய பின், பெருமாள் புறப்பட்டு, கங்கை கொண்ட மண்டபம் ராஜ வீதிகளை சுற்றி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திரண்டு, பெருமாளை வழிபட்டனர். மதியம், 1:15 மணிக்கு, பெருமாள், கோவிலை மீண்டும் வந்தடைந்தார். போக்குவரத்து மாற்றம்வரதர் கருட சேவை திருவிழாவை முன்னிட்டு, கச்சபேஸ்வரர் கோவில் எதிரில், டவர் அமைக்கப்பட்டு, போலீசார், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சுவாமி செல்லும் வழியில், போலீசார், அறிவிப்பு செய்தபடி சென்றனர்.காஞ்சிபுரம் நகரில், அனைத்து சாலைகளிலும், மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதனால், வந்தவாசி, உத்திரமேரூர், தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் பஸ்கள், மாற்றுத்தடத்தில் இயக்கப்பட்டன. மதியத்திற்கு பின், வழக்கமான வழிகளில், பஸ்கள் சென்றன.