திருப்புத்துார் : திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் வசந்த உற்ஸவத்தை முன்னிட்டு நேற்று கருவேல்குரிச்சி மணிமுத்தாற்றில் பெருமாள் கஜேந்திர மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இக்கோயிலில் மே16ல் யாகசாலை பூஜைகளுடன் வசந்த உற்ஸவம் துவங்கியது. 2 நாட்கள் யாகசாலை பூஜைகள் நடந்தன. மே 18 காலை 7:30 மணிக்கு பெருமாள் ஆடும் பல்லக்கில் புறப்பட்டு, கருவேல்குரிச்சி மணிமுத்தாற்றில் எதிர் கொண்டழைக்கப்பட்டார். தொடர்ந்து கஜேந்திர மோட்ச மண்டபத்தில் எழுந்தருளினார். பத்தி உலாத்துதல் முடிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று அதிகாலை 5:30 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் மணிமுத்தாறுக்கு புறப்பட்டார். அங்கு முதலையிடம் சிக்கிய கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்தார். ஏராளமான பக்தர்கள் கஜேந்திர மோட்சத்தை தரிசித்தனர்.