சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி விசாகத் தேரோட்டத்தையொட்டி பக்தர்கள் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சிவகங்கை தேவஸ்தானத்துக்குட்பட்ட இக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா மே 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 16 ம் தேதி திருக்கல்யாணமும்,மே 17 ம் தேதி கழுவன் திருவிழாவும் நடந்தது. நேற்று இக்கோயிலின் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி காலை 10:00 மணிக்கு பூரணை புட்கலை தேவிமார்களுடன் சேவுகப்பெருமாள் அய்யனார் திருத்தேரில் எழுந்தருளினார். பகல் 3:45 மணிக்கு சிங்கம்புணரி நாட்டார்கள் சந்திவீரன்கூடத்தில் இருந்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்து வடம்பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். நான்கு ரத வீதிகளின் வழியாக வலம் வந்த தேர் மாலை 4:30 மணிக்கு ஐதீக முறைப்படி கழுவன் கழுவச்சி மண்சிலைகள் மீது ஏற்றப்பட்டது. மாலை 5:20 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. அப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடனாக தேங்காய்களை தேரடிப்படிகளில் வீசியெறிந்து உடைத்தனர். இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த நிகழ்ச்சியில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான தேங்காய்கள் உடைக்கப்பட்டன. உடைந்த தேங்காய்களை பலர் ஹெல்மெட் அணிந்து சாக்குப்பைகளில் சேகரித்தனர். இரவு தேரடிப்பூஜை நடத்தப்பட்டது. காலை முதல் மாலை வரை விழாவுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு தேரடி வீதியில் அன்னதானம் வழங்கப்பட்டது. பத்தாம் திருவிழாவான இன்று இரவு பூப்பல்லக்கு உற்ஸவம் நடக்கிறது.