பதிவு செய்த நாள்
22
மே
2019
11:05
திருப்பூர்: திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் நடந்த தெப்பத்திருவிழாவில், வீரராகப்பெருமாள் சிறப்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகப்பெருமாள் கோவில், வைகாசி விசாகத்தேர்த்திருவிழா நடந்து வருகிறது. விழாவின், 10ம் நாளான நேற்று, தெப்பத்திருவிழா நடைபெற்றது. காலை, 10:00 மணிக்கு, விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வர சுவாமி, சோமாஸ்கந்தர், விநாயகருக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஸ்ரீதேவி ஸ்ரீபூமிதேவி தாயார்கள் சமேத வீரராகவப்பெருமாளுக்கு, பல்வேறு திரவியங்களால் திருமஞ்சனம் நடைபெற்றது.
வீரராகவப்பெருமாள் கோவிலில், நேற்று மாலை, தெப்போற்சவம் விமரிசையாக நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள, தெப்பக்குளத்தில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், வீரராகவப்பெருமாள், தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். சிறப்பு பாராயணத்தடன், தாயார்களுடன் பெருமாள், மங்களஇசை முழங்க, தெப்பக்குள மண்டபத்தை சுற்றி வந்து, அருள்பாலித்தனர். பக்தர்கள் தெப்பத்தை சுற்றிலும் நின்று, பூ துாவி வழிபட்டனர்.