பதிவு செய்த நாள்
24
மே
2019
11:05
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், வைகாசி பிரம்மோற்சவத் தின் ஏழாம் நாள் உற்சவ மான தேரோட்டம், கோலாகலமாக நேற்று (மே., 23ல்) நடந்தது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 10 நாட்கள் நடைபெறும் வைகாசி பிரம்மோற்சவம், 17ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ஏழாம் நாள் பிரபல உற்சவமான தேரோட்டம் கோலாகலமாக நேற்று (மே., 23ல்) நடந்தது.அதிகாலை, 4:15 மணிக்கு, யாருடன் கோவிலில் இருந்து புறப்பட்ட வரதராஜ பெருமாள், காந்திசாலை, தேரடியில் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த தேரில் எழுந்தருளினார்.
அங்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 6:03 மணிக்கு அதிர்வேட்டுகள் முழங்க, வாத்திய கருவிகள் இசைக்க, பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க, அசைந்து ஆடியபடியே தேர் புறப்பட்டது.காந்தி சாலை, காமராஜர் சாலை மற்றும் நான்கு ராஜ வீதிகள் வழியாக சென்ற தேர், காலை, 10.50 மணிக்கு, நிலையை அடைந்தது. பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து, பக்தி பரவசத்துடன் சுவாமியைவழிபட்டனர்.
தேரோட்டத்தின்போது, காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் இருந்து, செங்கழுநீரோடை வீதிக்கு தேர் சென்றதும், கச்சபேஸ்வரர் கோவில் அருகில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.அதே போல், காமராஜர் வீதி, மடம் தெரு, தாயார் குளம் ரோடு, நான்கு முனை சந்திப்பில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.இதில், 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றும் சிக்கிக்கொண்டது. உடனே, அங்கிருந்த சில வாகன ஓட்டிகள், ஆம்புலன்ஸ் செல்வதற்கு முதலில் வழி ஏற்படுத்தினர். பின், போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனர்.
தேரோட்டம் விழா துளிகள்: * தேரோட்டத்தை காண வந்த பக்தர்களுக்கு, பல்வேறு சங்கங்கள், வர்த்தக நிறுவனங்கள், தனி நபர்கள் சார்பில், நீர்மோர், குளிர்பானம், புளியோதரை, சாம்பார், பிரின்ஜி உள்ளிட்ட வெரைட்டி சாதம் வழங்கப்பட்டது.
* பக்தர்களின் பாதுகாப்புக்காக தேருக்கு பின்புறம், ஒரு 108 ஆம்புலன்ஸ் வாகனமும், முன்புறம், டூ - வீலர் ஆம்புலன்ஸ் வாகனமும் வந்தன. தீயணைப்பு வாகனமும், தேரை பின்தொடர்ந்து வந்தது.
* பல ஊர்களில் இருந்து வந்த பஜனை கோஷ்டியினர், தேரின் பின்புறம், பஜனை பாடல்களை பாடியபடியே சென்றனர்.
* தேரோட்டத்தையொட்டி, உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமான பொம்மை, தேங்காய், பழம், பூ, கற்பூரம் என, பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் காஞ்சிபுரத்தில் குவிந்தனர்.
* கோடை வெயிலுக்கு பக்தர்களின் பாதங்களை காக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் சார்பில், டேங்கர் லாரி மூலம் குடிநீரை சாலையில் தெளித்தபடியே சென்றனர்.
* பாதுகாப்பு பணியில் நூற்றுக்கணக்கான போலீசார் ஈடுபட்டிருந்தனர். திருவிழாவை காணவந்த பெண்கள், தங்கள் நகைகளை கவனமாக பார்த்துக்கொள்ளுமாறு, போலீசார், ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தவாறு இருந்தனர்.