பதிவு செய்த நாள்
26
மே
2019
02:05
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரிய கோவில், 216 அடி உயரம் கொண்ட மூலவர் கோபுரத்தை, புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.உலக புகழ் பெற்ற, தஞ்சாவூர் பெரிய கோவிலின் மூலவர் பெருவுடையாருக்கு 216 அடி உயரமுள்ள கோபுரம் எழுப்பப்பட்டுள்ளது.
யுனெஸ்கோ அமைப்பு, உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரித்துள்ள இந்த கோவிலை, இந்திய தொல்லியல் துறை பழமை மாறாமல் பாதுகாத்து, பராமரித்து வருகிறது.இதனால், கோவிலில் உள்ள கோபுரங்களுக்கு வர்ணம் பூசுவது கிடையாது. 2010ம் ஆண்டு, பெரிய கோவில் கட்டி முடிக்கப்பட்ட, 1000வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.அப்போது, கோவிலின் அனைத்து கோபுரங்களும், வேதியியல் முறையில்சுத்தம் செய்யப்பட்டன. தற்போது, துாசி படிந்து, நிறம் மாறி போனதை அடுத்து இரு ஆண்டுகளாக ஒவ்வொரு வாயிற் கோபுரங்களும் சுத்தம் செய்யப்பட்டன.கடந்த, 10 நாட்களாக, மூலவர் கோபுரம் சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.இது குறித்து, இந்திய தொல்லியல் துறையின் - வேதியியில் பிரிவு, உதவி அலுவலர், வினோத்கூறியதாவது:பாசி படிந்து, கறுப்பு நிறமாக மாறி உள்ள பகுதிகள், தேங்காய் நார் துாரிகை மூலம் சுத்தம் செய்யப்படும். பின், அமோனியா கலந்த தண்ணீரால், துாய்மைப் படுத்தப்படும்.மழை நீரால், கற்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, ஹைட்ரோ போபிக் என்ற சிலிக்கான் கலவை பூச்சு செய்யப்படும். கற்கள் சிதையாத அளவுக்கு, வேதித்தன்மை குறைவாக இருக்கும் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. மூலவர் கோபுரத்தின் சுத்தம் செய்யும் பணிகளை, ஆறு மாத காலத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.தொடர்ந்து, அம்பாள், விநாயகர், சுப்ரமணியர் உள்ளிட்ட சன்னிதிகளின் கோபுரங்களும் சுத்தம் செய்யப்படும்.இவ்வாறு, அவர்கூறினார்.