பதிவு செய்த நாள்
26
மே
2019
02:05
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், வைகாசி பிரம்மோற்சவத்தின், ஒன்பதாம் நாளான நேற்று காலை, தீர்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடந்தது. அனல் தகித்த கோவில் குளத்தின் படிகளில், காத்திருந்த ஏராளமான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் புனித நீராடினர்.
காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், 17ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மே, 19ல் கருடசேவையும், 23ல் தேரோட்டமும் கோலாகலமாக நடந்தது. இதில், ஒன்பதாம் நாள் உற்சவமான நேற்று காலை, ஆள் மேல் பல்லக்கு உற்சவம் நடந்தது.இதில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் வீதியுலா சென்ற பெருமாள், விளக்கடி கோவில் தெரு, மூங்கில் மண்டபம், இரட்டை மண்டபம் நான்கு ராஜ வீதிகள் வழியாக சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தார்.பின், கோவிலில் பல்வேறு விசேஷ பூஜைகளுக்குப் பின், காலை, 11:43 மணிக்கு, கோவிலில் உள்ள அனந்தசரஸ் புஷ்கரணி என்ற தெப்பகுளத்தில் பெருமாளுக்கு தீர்த்தவாரி நடந்தது. அதை தொடர்ந்து பக்தர்கள் புனித நீராடினர்.காஞ்சிபுரத்தில், நேற்று, காலை, 10:30 மணிக்கே, 39 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை நிலவியதால், தீர்த்தவாரி நடந்த குளத்தின் படிகளில் நிற்பது தீ மிதித்தைப் போன்று அனல் தகித்தது.கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாத பக்தர்கள் படிகளில் காத்திருந்து, சுவாமியை பக்தி பரவசத்துடன் வழிபட்டு கோவில் தெப்ப குளத்தில் புனித நீராடினர்.உற்சவத்தையொட்டி பக்தர்களின் பாதுகாப்புக்காக தீயணைப்பு மீட்புபணி துறையினரும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவு, புண்ணியகோடி விமானம் உற்சவம் நடந்தது. 10ம் நாள் உற்சவமான இன்றுடன், வைகாசி பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.