பதிவு செய்த நாள்
27
மே
2019
10:05
திருத்தணி: திரவுபதியம்மன் கோவில்களில் நடந்த தீ மிதி திருவிழாவில், 18 நாளில், நேற்று, காலை படுகளத்தில் துரியோதனன் மரணம் அடைந்தான். தொடர்ந்து, பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
திருத்தணி அடுத்த, மேல்திருத்தணி மற்றும் எஸ்.அக்ரஹாரம் மதுரா குடிகுண்டா கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில்களில், 9ம் தேதி கொடியேற்றத்துடன் தீ மிதி திருவிழா துவங்கியது. தினமும், காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனகாப்பு மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன.இதுதவிர, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று, காலை, 10:00 மணியளவில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. துரியோதனன் இறந்த சோகத்தில், காந்தாரி துடப்பம், முறத்தால் அங்கிருந்த பக்தர்களை விரட்டி அடித்தார்.அதை தொடர்ந்து, கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து மூலவர் அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். நண்பகலில், அக்னி குண்டத்தில், தீ மூட்டி வைத்தனர். பின், மாலை, 6:00 மணிக்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர். உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.