மதுரை : மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் செல்ல ரூ.2 கோடி செலவில் திருப்பரங்குன்றத்தில் நடைபாதையை மேம்படுத்த மதுரை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. சுப்பிரமணிய சுவாமி கோயில் மலையை சுற்றி பவுர்ணமியன்று பக்தர்கள் கிரிவலம் செல்வது அதிகரித்து வருகிறது.இரண்டு கிலோ மீட்டருக்கு சிமென்ட் சாலை, 1.25 கி.மீ.க்கு தார்ச்சாலை உள்ளன. இவை ஆங்காங்கே பெயர்ந்து காணப்படுகிறது. ரோட்டோரம் குப்பை கொட்டப்பட்டு மோசமாக உள்ளது. கிரிவலப் பாதையில் பக்தர்கள் செல்ல சிரமப்பட்டனர். பக்தர்கள் எளிதாக கிரிவலம் செல்லும் வகையில் பாதையை மேம்படுத்த மாநகராட்சி ரூ.2 கோடி ஒதுக்கியது. கிரிவலம் செல்ல அனைத்து வசதிகளும் செய்ய திட்டமிடப்பட்டது. பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்கி சுற்றிப்பார்க்க ரூ.6 கோடியில் வாகன நிறுத்துமிடம் சமயலறையுடன் கூடிய தங்க இருப்பிட வசதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பாரம்பரிய நடை: மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து திருமலை நாயக்கர் மகால் வரை பாரம்பரிய நடைப்பயணம் திட்டத்தை (ஹெரிடேஜ் வாக்) அறிமுகப்படுத்தி, நடைபாதையை அழகுபடுத்த ரூ.ஒரு கோடி ஒதுக்கி மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.