பதிவு செய்த நாள்
12
ஜூன்
2019
02:06
சபரிமலை: சபரிமலை, பக்தர்களுக்கான கோவில்; அதை வருமானம் தரும் இடமாக அரசு அமைப்புகள் கருதக்கூடாது என, கேரள உயர் நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞர் ஆணையர், தன் அறிக்கையில் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு, கேரளாவில் பெய்த பெருமழையால், பம்பை உருக்குலைந்தது. இதை தொடர்ந்து, நிலக்கல் வரை மட்டுமே தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. சபரிமலை, சீசன் காலத்தில், நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு, அதிக பஸ்கள் இயக்கப்படும். ஆனால், மாத பூஜை காலங்களில் போதிய பஸ்கள் இயக்கப்படுவதில்லை.கடந்த ஆண்டு, சபரி மலையில், மண்டல, மகரவிளக்கு காலத்தில், பெண்களை கோவிலுக்குள் அனுமதித்த பிரச்னையால், பக்தர்கள் கூட்டம் பெருமளவு குறைந்தது. மாத பூஜை காலத்தில், பம்பை வரை வாகனங்கள் அனுமதிக்கப்படாததாலும், பக்தர்கள் வருகை குறைந்தது.
இதனால், தேவசம்போர்டுக்கு, 100 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மாத பூஜை, ஓணம், விஷூ போன்ற நாட்களில், தனியார் வாகனங்களை பம்பை வரை அனுமதிக்க வேண்டும் என கோரி, தேவசம்போர்டு, கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதன் மீது விசாரணை நடத்திய நீதிபதிகள், இது குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க, வழக்கறிஞர் ஆணையராக, ஏ.எஸ்.பி.குறுப்பு என்பவரை நியமித்தனர். இவர் நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தி, அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், அவர் கூறியுள்ளதாவது: சபரிமலை, பக்தர்களுக்கான கோவில். கேரள போலீஸ், அரசு போக்குவரத்துக்கழகம், தேவசம்போர்டு உள்ளிட்ட அரசு அமைப்புகளுக்கு வருமானம் பெற்றுத் தரும் இடம் அல்ல.
பக்தர்களை சிரமப்படுத்துவதால் தான், வருமானம் குறைந்துள்ளது. மாத பூஜைக்கான நடை திறக்கும் நாளில், பகல், 12:00 மணிக்கு தான் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்களை வெயிலில் நடக்க வைப்பது கொடுமையானது. எனவே, அதை காலை, 6:00 மணியாக மாற்ற வேண்டும். மாத பூஜை, சிறப்பு பூஜை நாட்களில், வாகனங்களை பம்பை வரை இயக்க, அனுமதிக்க வேண்டும். பம்பை ஹில்டாப், திருவேணி, சக்குபாலம் ஆகிய இடங்களில், வாகனங்களை, பார்க்கிங் செய்யலாம். அந்த இடங்களை, தேவசம்போர்டு பராமரிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.