பதிவு செய்த நாள்
13
ஜூன்
2019
11:06
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் அடுத்த மாதம் ஆடிக்குண்டம் விழா நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு ஆடிக்குண்டம் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இவ்விழாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவர்.இந்தாண்டு ஆடிக்குண்டம் விழா அடுத்த மாதம், 23ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது.
26ம் தேதி லட்சார்ச்சனையும், 27ல் கிராமசாந்தியும், 28ல் கொடியேற்றமும், மாலையில் சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும், 29 ல் பொங்கல் வைத்து குண்டம் திறக்கப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, 30ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைப்பும், காலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 31ம் தேதி ஆடி அமாவாசை, மாவிளக்கு, பூ பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது. ஆக., 1ம் தேதி பரிவேட்டையும், வாணவேடிக்கையும், 2ல் மகா அபிஷேகம், மஞ்சள் நீராட்டும், 3ல் ஆடி, 18 பெருக்கும், 5ல் திருவிளக்கு பூஜையும், 6ம் தேதி மறுபூஜையும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் ராமு, பரம்பரை அறங்காவலர் வசந்தா மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.