பஞ்சவடீ : 36 அடி உயரம், ஐந்து முகம், நின்ற திருக்கோலம். அருள்பொங்கும் சாந்தமான முகபாவம், சர்வ சக்தி, 118 அடி உயர ராஜகோபுரம், அதன் மீது 5 அடி உயர கலசம், அபிஷேகம் செய்ய குறைந்தது 1008 லிட்டர் பால் அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கு மிகப்பெரிய லிப்ட். 1200 கிலோ எடையுள்ள மணி உள்ளது. இதனை ஒலிக்கச்செய்தால் குறைந்தது 8 கி.மீ. துாரம் ஒலி கேட்கும். இப்படி எல்லாமே பிரமாண்டமாக அனைத்துமே சிறப்புடன் அமைந்த திருக்கோயில் தான் பஞ்சவடீ ஸ்ரீ ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் திருக்கோயிலாகும்.
இக்கோயில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் - புதுச்சேரி வழியில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வருகிற 23.6.19 அன்று காலை 9 மணிக்கு மேல் 10. 30 மணிக்குள் ஜயமங்கள ஸ்ரீ மகாகணபதி, ஜயமங்கள பட்டாபிஷேக ஸ்ரீ ராமச்சந்தி மூர்த்தி, விஸ்வரூப ஜயமங்கள பஞ்சமுக ஸ்ரீ ஆஞ்ஜ நேயர் மற்றும் நுாதன ஸ்ரீவாரி வேங்கடாசலபதி ஆகிய சுவாமிகளுக்கு அஷ்டபந்தன, ஸ்வர்ண பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.இந்த கும்பாபிஷேகமானது வைகானஸ முறைப்படி 17.6.19 முதல் 23.6.19 வரை ஏழு நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேகத்தை ஸ்ரீ ஜகத்குரு பதரீ சங்கராச்சார்ய ஸ்ரீக்ஷேத்ர சகடபுர ஸ்ரீவித்யாபீடாதீஸ்வர ஸ்ரீவித்யாபிநவ ஸ்ரீகிருஷ்ணாநந்த தீர்த்த சுவாமிகள் வருகைதந்து கும்பாபிஷேகத்தை சிறப்பிக்க உள்ளார்கள்.