திருமறைநாதர் கோயிலுக்கு வாகனங்கள் தயாரிப்பு தீவிரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூன் 2019 11:06
மதுரை, மதுரை மாவட்டம் மேலுார் அருகேவுள்ள திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலுக்கு அத்தி மரத்தில் சிம்மம், நந்தி, யானை வாகனங்களை செதுக்கும் பணியில் ஸ்தபதிகள் இரு மாதங்களாக தீவிரமாக உள்ளனர்.
மீனாட்சி அம்மன் கோயிலின் துணை கோயிலான இக்கோயில் பழமையும், புராதன சிறப்பும் மிக்கது. திருவிழாக்களில் சிம்மம், நந்தி, யானை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதி உலா வருவர். வாகனங்கள் பழுதாகி இருப்பதால் கோயில் சார்பில் புதிய வாகனங்கள் தயாரிக்க தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் நடவடிக்கை எடுத்தனர். இதற்கான டெண்டர் கோரப்பட்டது. அத்தி மரத்தில் இரு நந்திகள், யானை, சிம்ம வாகனங்களில் தலா ஒன்று தயாரிக்க சேலம் தம்மம்பட்டி ஸ்தபதி ரவி டெண்டர் எடுத்தார்.ரவி கூறியதாவது: கிருஷ்ணகிரியில் அத்திமரங்கள் அதிகம். அத்திமரம் சிவ வம்சத்தை குறிக்கும் பால் மரம் என அழைக்கப்படுகிறது. வைரம் பாய்ந்த அத்தி மரக்கட்டைகளில் சுவாமி வாகனங்கள் தயாரிக்கப்படும். காலப்போக்கில் மரம் இலகுவாகி விடும். சுவாமியுடன் வாகனத்தை துாக்கி செல்ல வசதியாக இருக்கும். திருவாதவூர் கோயிலுக்கு தலா 450 கிலோ எடையுள்ள இரு நந்தி வாகனங்கள், 600 கிலோ எடையுள்ள யானை வாகனம், 400 கிலோ எடையுள்ள சிம்ம வாகனம் செதுக்கும் பணியில் 7 சிற்பிகள் இரு மாதங்களாக ஈடுபட்டுள்ளனர். இப்பணி ஒரு மாதத்திற்குள் முடியும். பின் வர்ணம் பூசப்பட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றார்.