காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் பிரம்மோற்சவ விழாவில், தங்க காகை வாகனத்தில் சனீஸ்வர பகவான் வீதி உலா நடந்தது. காரைக்கால் திருநள்ளாரில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.
இக்கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 30ம் தேதி முதல் 4ம் தேதி வரை, விநாயகர் மற்றும் சுப்ரமணியர் உற்சவம், கடந்த 5ம் தேதி, அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு, கடந்த 6ம் தேதி செண்பக தியாராஜ சுவாமிகள் உன்மத்த நடனத்துடன் வசந்த மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 10ம் தேதி தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 12ம் தேதி 5 தேர் திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் இரவு சனி பகவான் தங்க காகை வாகனத்தில் எழுந்தருளினார். முன்னதாக சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடத்தப்பட்டது. பின், தங்க காகை வாகனத்தில் எழுந்தருளிய சனி பகவான் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்தார். இவ்விழாவில் கட்டளை தம்பிரான் சுவாமிகள், கோவில் அதிகாரி சுந்தர், ராஜா சுவாமிநாத சிவாச்சாரியர் கலந்துகொண்டனர்.