பதிவு செய்த நாள்
16
ஜூன்
2019
03:06
சென்னை:சபரிமலை அய்யப்பன் கோவில் சுவரை அலங்கரிக்க உள்ள, தங்க முலாம் பூசப்பட்ட தகடுகளுக்கு, சென்னையில், நடிகர் ஜெயராம் முன்னிலையில், நேற்று விசேஷ பூஜை நடந்தது. சபரிமலை அய்யப்பன் கோவில், நிலை கதவுக்கு அருகேயுள்ள, பக்கவாட்டு சுவர்கள், தங்க முலாம் பூசப்பட்ட தகடுகளால், அலங்கரிக்கப்பட உள்ளன. இதற்கான தகடுகளை, இறைவனுக்கு அர்ப்பணிக்கும் பூஜை, சென்னையில், நேற்று நடந்தது.
இதில், நடிகர் ஜெயராம், அய்யப்ப பக்தி பாடகர், வீரமணி ராஜு, பங்கஜ் பண்டாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தங்க முலாம் பூசப்பட்ட தகடுகள், ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப் பட்டுள்ளன. இதில், இரண்டு அஷ்டலட்சுமி பேனல்கள், இரண்டு புனித சின்னங்கள், ஒரு லட்சுமி சின்னம் ஆகியவை இடம் பெற்று உள்ளன. 6 அடி உயரம், 1 அடி அகலத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இத்தகடுகளுக்கு, நேற்று அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு, உரிய பாதுகாப்புடன், கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தங்க முலாம் பூசப்பட்ட இந்த தகடுகள், ஒரு வாரத்தில், சபரி மலை கோவிலில் பொருத்தப்பட உள்ளன. தங்க தகடுக்கான முழு செலவையும், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த, அய்யப்ப பக்தர் கோவர்தன் ரோடம் ஏற்றுள்ளார்.இது குறித்து, நடிகர் ஜெயராம் கூறுகையில், நான் அய்யப்ப பக்தன் என்ற முறையில், இப்பணியை கேள்விப்பட்டு வந்தேன். இறைவனுக்கு இந்த தகடுகளை அர்ப்பணிப்பதை, எனக்கு கிடைத்த கவுரவமாக கருது கிறேன், என்றார்.