பதிவு செய்த நாள்
16
ஜூன்
2019
03:06
புதுச்சேரி: பஞ்சவடீ 36 அடி விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் 23ம் தேதி காலை நடைபெற உள்ளது.இது குறித்து ஆலய புரவலர் மற்றும் ஸ்தபதி ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:பரம பவித்ரமான பஞ்சவடி எண்ணும் திவ்ய சேஷத்திரம் புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் புதுச்சேரியில் இருந்து 11 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. இங்கு இறைவனின் திருவருள்படி வலம்புரி மகாகணபதி, ஜெயமங்கள பட்டாபிஷேக ராமச்சந்திர மூர்த்தி, 36 அடி விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேய ஸ்வாமிகள் தனி சந்நிதி 2007ம் ஆண்டு முதலாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஆகம விதிகளின்படி ஆலய திருமூர்த்தங்களுக்கு ஸாந்நித்யம் நிலைக்கவும், சேஷத்திரங்களின் அதன் சக்தி பன்மடங்கு பெருகவும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மஹாகும்பாபிஷேகம் நிகழ்த்த வேண்டும். அதன்படி வரும் 23ம் தேதி பஞ்சவடீ சேஷத்திரத்தில் 5 நிலை ராஜகோபுரம், விநாயகர், ராமர் மற்றும் 36 அடி ஆஞ்ஜநேயர் ஸந்நிதி விமானங்களுடன், கடந்த மாதம் 10ம் தேதி புதிதாக நிர்மாணம் செய்யப்பட்டுள்ள ஸ்ரீவாரி வேங்கடாசலபதி ஸந்நிதி விமானத்திற்கும் மஹாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக ஆலயத்தின் பின்புறம் 20 ஆயிரம் சதுர அடி கொண்ட பிரம்மாண்டமான யாகசாலை, அமைத்து மூன்று பஞ்சாக்னியும் மற்றும் ஒரு சப்யாகினியும் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 37 குண்டங்களும், அவற்றிற்கேற்ப யக்ஞ வேதிகைகளும் பிரம்மாண்டமான முறையில் நிர்மானம் செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சிகளை பஞ்சமுக ஜெயமாருதி ஸேவா டிரஸ்ட் ஏற்பாடு செய்து வருகிறது. வரும் 17ம் தேதி காலை 9:00 மணி முதல் பூர்வாங்க பூஜைகள் என்று அழைக்க கூடிய மகா கணபதி ேஹாமம், நவக்கிரஹக ேஹாமம், உற்சவர் மகா கணபதி அபிேஷகம், தீபாராதனை நடக்கிறது. மாலை பகவத் ப்ரார்த்தனை, ஆலய நிர்வாகிகள் மஹா சங்கல்பம், ம்ருத்ஸங்க்ரஹணம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி நடக்கிறது. அன்று முதல் பூர்வாங்க பூஜைகள் வரும் 23ம் தேதி மாலை வரை நடைபெற உள்ளது.வரும் 19ம் தேதி மாலை விசேஷ புண்யாஹவாசனம் செய்து அக்னிமதனம் என்று சொல்லக்கூடிய இயற்கையான முறையில் அக்னி உருவாக்கி அதன் மூலம் 23ம் தேதிவரை வேள்விகள் நடத்த உள்ளனர். நெருப்பு இயற்கையான முறையில் அரளி கட்டை அல்லது கற்களால் அக்னி உருவாக்கப்படும்.மேலும் ராஜாக்கள் காலத்தில் ராஜகோபுரம் அமைந்திருக்கும் ஆலயத்தில் தச தரிசன வைபவம் நடைபெறுவதைப்போல் இந்த ஆலயத்திலும் 22ம் தேதி மாலை ஐந்து நிலை ராஜகோபுரத்தில் தச தரிசன பூஜை நடக்கிறது.
பசு, யானை, நாட்டியக் குதிரைகள், பச்சைக்கிளி, நிலைக்கண்ணாடி, கன்னிகை, சுமங்கலி, சன்னியாசி, வேதவிற்பன்னர்கள், அறங்காவலர்கள் மற்றும் பக்தகோடிகள் பிரவேசங்கள் நடைபெறும். வரும் 23ம் தேதி காலை 9:00 மணிக்கு மேல் 10:30க்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெறும். அதற்கான புனித நீர் கங்கை, யமுனை, சரயு பிரயாகை திரிவேணி சங்கமம், கோதாவரி, நர்மதை, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, பாலாறு, துங்கபத்ரா போன்ற புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வந்து வைக்கப்பட உள்ளன. கும்பாபிஷேகம் முடிந்த பின்னர், இந்த புனிதநீர் அனைத்து பக்தர்களுக்கும் நுாதன முறையில் தெளிக்கப்படும். இவ்விழாவை முன்னிட்டு 23ம் தேதி காலை 5:30 மணி முதல் மாலை வரை புதுச்சேரி மற்றும் திண்டிவனம் பஸ் நிலையத்தில் பஞ்சவடீ டிரஸ்ட் மூலம் இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பஸ் நிலையத்திலும் 10 க்கும் மேற்பட்ட பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே போல் கும்பாபிஷேகம் முடிந்ததும் பஞ்சவடீ ஆலயத்தில் இருந்து திரும்பி செல்ல இலவச பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 18 ம் தேதி முதல் 23 ம் தேதி வரை இன்னிசை மற்றும் உபன்யாச நிகழ்ச்சி நடக்கிறது. 18ம் தேதி மாலை 6:30 மணிக்கு வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசம், 19ம் தேதி உடையாளூர் கல்யாணராம பாகவதரின் நாமசங்கீர்த்தனம், 20ம் தேதி ஐ தராபாத் சிவா அவர்களின் சிறப்பு இசை நிகழ்ச்சி, 21 ம் தேதி வரதராஜனின் தியாகராஜர் நாடகம், 22ம் தேதி ஸ்ரீகிருஷ்ணபிரேமி அவர்களின் சுந்தரகாண்டம் உபன்யாசம், 23ம் தேதி கும்பாபிஷேகத்தன்று காலை தாமல் ராமகிருஷ்ணன் அவர்களின் நேரடி வர்ணணை நடக்கிறது.மேலும் ஒரே நேரத்தில் சுமார் 7500 பேர் சாப்பிடக்கூடிய வகையில் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவில் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் விழா அழைப்பிதழை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியின்போது அறங்காவல் குழு தலைவர் கோதண்டராமன், செயலர் நரசிம்மன், கும்பாபிஷேக குழு செயலர் பழனியப்பன், டிரஸ்டிகள் கச்சபேஸ்வரன், செல்வம், கோவில் ஸ்தாபகர் சந்தானம் மற்றும் பட்டாச்சாரியார்கள் வெங்கடேசன், ஸ்ரீதர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.