பதிவு செய்த நாள்
17
ஜூன்
2019
12:06
பழநி: ஆனி மாதபிறப்பை முன்னிட்டு, பழநி மலைக்கோயில் ஆனந்த விநாயகருக்கு கும்பகலசங்கள் வைத்து, கணபதி ஹோமத்துடன், யாகபூஜை நடந்தது. விநாயகருக்கு கலசநீர் அபிஷேகம் செய்து, லட்டு படைக்கப்பட்டு, வெள்ளிக்கவச அலங்காரம், தீபாராதனை நடந்தது.
திருஆவினன்குடி கோயில், குழந்தைவேலாயுதசுவாமி தட்சிணாமூர்த்தி, துர்க்கை உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர். பெரியநாயகியம்மன் கோயில், லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில், பெரியாவுடையார் கோயில் உள்ளிட்ட கோயில்களில், பெருமாள், அம்மன், சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரத்தில், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மலைக்கோயிலில் குவிந்த பக்தர்கள் பொதுதரிசனவழியில் 2 மணிநேரம் வரை காத்திருந்து முருகரை தரிசனம் செய்தனர். இரவு தங்கரதப்புறப்பாட்டிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சின்னாளபட்டி: பவுர்ணமியை முன்னிட்டு சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. வள்ளி, தெய்வான சமேத சிவசுப்பிரமணியர், சதுர்முக முருகனுக்கு, திரவிய அபிஷேகம் நடந்தது. ராஜ அலங்காரத்துடன் பவுர்ணமி மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.