பழநி : பழநியில் பலத்த காற்று காரணமாக மலைக்கோயில் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் பாதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் உள்ள மலைக்கோயில்களில் பழநி முருகன் கோயிலில் மட்டுமே ரோப்கார் இயக்கப்படுகிறது. இது தினமும் காலை 7:30மணி முதல் இரவு 8:30மணிவரை மலைக்கோயிலுக்கு மூன்று நிமிடங்களில் எளிதாக செல்லலாம்.பொதுவாக பலத்த காற்று, மழை பெய்தால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி ரோப்கார் நிறுத்தப்படுவது வழக்கம். நேற்று பழநி மலைப்பகுதியில் காலை 10:30 மணி முதல் மாலை வரை 40 கி.மீ., வேகத்திற்கு பலத்த காற்று வீசியது. இதனால் ரோப்கார் நிறுத்தப்பட்டது. வின்ச் ஸ்டேசனில் ரோப்காரில் செல்ல குவிந்த பக்தர்கள், மற்ற இருவின்ச்களில் செல்ல ஒருமணிநேரம் வரை காத்திருந்து சென்றனர். காற்று குறையும் நேரத்தில் ரோப்கார் இயக்கப்படும் என கோயில் அதிகாரிகள் கூறினர்.