தொண்டரே தெய்வமான அனுமனுக்கு பஞ்சவடீயில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூன் 2019 12:06
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் - புதுச்சேரி வழியில் அமைந்துள்ள விஸ்வரூப ஜயமங்கள பஞ்சமுக ஸ்ரீ ஆஞ்ஜநேயர் கோயிலில் வருகிற 23.6.19 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
அனுமன் வாலில் குங்குமம் வைத்து வழிபடும் வழக்கம் உள்ளது. இதன் தாத்பர்யம் என்னவென்றால், அனுமாருக்கு வாலில் தான் சக்தி அதிகம். பக்தி சிரத்தையுடன் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டு இடுப்பில் வால் தோன்றும் திருவிடத்தில் இருந்து தினமும் சந்தனம் சாத்தி குங்குமத் திலகம் வைத்துக் கொண்டு வரவேண்டும். வாலின் நுனியை அடைந்ததும், கலைத்துவிட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுபதினத்தில், எம்பெருமானுக்கு வடைமாலை சாத்தி, உப்பிலியப்பனுக்கு நிவேதிப்பது போல் உப்பில்லா திருவமுது நிவேதிக்க வேண்டும். காரியம் சித்தியாகும் வரை இவ்வண்ணம் பொட்டு வைத்துக் கொண்டே வர வேண்டும்.
இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப்பூச்சும், வெற்றிலை மாலையும் நிச்சயம் இடம் பெறும். இவரது சன்னதியிலும் துளசியே பிரதான பிரசாதம். பாரதப்புண்ணிய பூமியில் ராம துாதனான தொண்டரையே தெய்வமாக போற்றப்படும் மேன்மையை ஆஞ்ஜநேயர் வரலாற்றில் காணலாம். ஆஞ்ஜநேயர் பெரிய வராக வளர்ந்த பிறகு பெரிய கடலை தாண்டினார் என்றாலும், சிறியவனாக இருந்த போது பூமியிலிருந்து ஒரே தாவலில் சூரியனை எட்டிப்பிடித்தவர், எனவே இவர் தனது பக்தர்களுக்கு அனைத்தையும் சாதிக்க இயலும் என்ற எண்ணத்தை அருளுகிறார். சிவனும் விஷ்ணுவும் விஸ்வரூபம் எடுத்திருந்தாலும், பொதுவாக ஆஞ்ஜநேயருக்கு தான் மிகப்பெரிய உருவம் உடைய கோயில்கள் அதிகமாக உள்ளது.