பதிவு செய்த நாள்
19
ஜூன்
2019
12:06
புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே, 21 ஐம்பொன் சிலைகள், நேற்று கண்டெடுக்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம், பேரையூர் கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, நாகநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து, சில அடி துாரத்தில், கண்மாய் பகுதியில், சுப்பன், 56, என்பவருக்கு, சொந்தமான தோட்டம் உள்ளது. இதில் உள்ள மரங்களை அகற்றி, சுத்தம் செய்யும் பணி, நேற்று நடந்தது.அப்போது, அங்கு இருந்த, வாகை மரத்தை, வேரோடு அகற்ற, ஜே.சி.பி., இயந்திரம் உதவியுடன், குழி தோண்டப்பட்டது. அப்போது, பழங்கால ஐம்பொன் சிலை ஒன்று, கிடைத்தது.
இதையடுத்து, அந்த இடத்தில், மேலும் தோண்ட, தோண்ட, ஐம்பொன் சிலை குவியல் கிடைத்ததால், அப்பகுதியினர் திகைத்தனர்.இது குறித்து, வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த, திருமயம் தாசில்தார், சுரஷே் மற்றும் நமணசமுத்திரம் போலீசார், சிலை கண்டெடுக்கப்பட்ட இடத்தில், மேலும் தோண்டிப் பார்த்தனர். அப்போது, மேலும், சில சிலைகள் கிடைத்தன.சிவன், விஷ்ணு, பார்வதி, முருகன், வினாயகர், நடராஜர், மாணிக்கவாசகர் சிலைகள், பீடம், சூலாயுதம் உள்ளிட்ட, 21 பழங்கால ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து, தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துறை அதிகாரிகளின் ஆய்வுக்கு பின், சிலையின் காலம், மதிப்பு தெரியவரும் என, வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.