பதிவு செய்த நாள்
20
ஜூன்
2019
11:06
திருவண்ணாமலை, ஜூன் 20-திருவண்ணாமலையில், 1,500 ஆண்டுகள் பழமையான, முருகன், விநாயகர் கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.திருவண்ணாமலையை அடுத்த, தி.வலசை கிராம விவசாய நிலத்தில், 16ல், இரண்டு கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
இது குறித்து, கிராம மக்கள், திருவண்ணாமலை தொல்லியல் மையத்துக்கு, தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து, மைய தலைவர், நீதிதாஸ், தொல்லியல் அறிஞர், ராஜவேலு தலைமையிலான குழுவினர், அங்கு சென்று, ஆய்வு செய்தனர்.இதுகுறித்து, தொல்லியல் அறிஞர், ராஜவேலு கூறியதாவது:-கண்டெடுக்கப்பட்ட, முருகன் மற்றும் கதிர் விநாயகர் கற்சிலைகள், 1,500 ஆண்டுகள் பழமையானவை என, தெரிய வந்துள்ளது. இரண்டும், பல்லவர் காலத்தைச் சேர்ந்தது.தாமரை மலரின் மேல், நின்ற நிலையில் இருக்கும் முருகன் சிலை, அரிதான ஒன்று. ஆறுமுகனின், மூன்று முகங்கள் மட்டுமே தெரியும் வகையில், சிலை நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது.சிலையின் இடது கையில் உள்ள வில்லை, முருகன் திருப்பி பிடித்து உள்ளார்.அதனால், போர் முடிந்த பின் காட்சியாக, சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. சிலையின், வலது கீழ்ப்புறத்தில், ஏழு வரிகளுடன் கூடிய, சிறிய எழுத்து பகுதியும் இடம் பெற்றுள்ளது.அங்கு, செங்கற்களால் கட்டப்பட்ட, ஒரு கோவில் இருந்ததற்கான அடையாளம் காணப்படுகிறது. நான்கு கைகளுடன் கூடிய, கதிர் விநாயகர் சிலை குறித்து, ஆய்வு நடத்தி வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.