பதிவு செய்த நாள்
24
ஜூன்
2019
01:06
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஏழுநிலை ராஜ கோபுரத்துக்கு கற்கள் இல்லாததால், கட்டுமானப் பணிகள் பாதியில் நிற்கின்றன. கோவை யை அடுத்த, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், மிகவும் பிரசித்தி பெற்ற தாகும். அன்றாடம் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து அம்மனை வழிபடுகின்றனர். கோவிலில் உள்ள கடைகள் ஏலம் விடுவதன் வாயிலாக, பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் ஆண்டுக்கு, ஏழு கோடி ரூபாயுக்கும் மேல் வருவாய் கிடைக்கிறது.
அதிக வருவாயை ஈட்டித்தரும் கோவில்களுள் ஒன்றாகும்.புராதனமும் பழமையும் மிகுந்த கோவிலுக்கு ராஜ கோபுரம் அமைக்கும்படி பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் இந்து சமய அறநிலையத்துறை, 3.40 கோடி ரூபாய் செலவில் ஏழுநிலை ராஜகோபுரம் கட்ட அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து, 2017ம் ஆண்டு, 73 அடி உயரம், 52.9 அடி நீளம், 30.2 அடி அகலத்தில் ராஜகோபுர கட்டுமானப்பணிகள் துவங்கின. மூன்று ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது.
அஸ்திவாரப்பணிகள் நிறைவடைந்து, கல்காரப்பணிகளுக்கு ராசிபுரம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களில் இருந்து வடிவமைக்கப்பட்ட கற்களை கொண்டு வந்து கட்டுமானப் பணிகளை துவக்கினர். கற்கள் இருக்கும் வரை கட்டுமான பணிகள் வேகமாக நடந்தன. தற்போது கற்கள் வரத்து இல்லாததால், கடந்த ஆறு மாதங்களாக பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படாமல் ராஜகோபுர பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதியில் நிற்கும் ராஜகோபுரத்தை பார்த்து, மனவருத்தத்திற்குள்ளாகின்றனர். ராஜகோபுர கட்டுமானப்பணிகள் எதனால் பாதியில் நிற்கின்றன. என்று கோவில் அதிகாரி களிடம் பக்தர்கள் கேட்கின்றனர்.
மேலும், பணிகளை மீண்டும் விரைவாக துவங்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டுமென, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இது குறித்து கோவில் உதவி கமிஷனர் ராமு கூறுகையில்,”ராஜகோபுர கல்காரப்பணிகளுக்கு தேவையான கற்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெட்டி எடுத்து வடிவமைப்புசெய்யும் பணிகள் நடைபெறுகின்றன. பணிகளை துரிதமாக செய்யும்படி ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கற்கள் வந்ததும், பணிகள் துவங்கப்படும்,” என்றார். அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சியமான பதில் பக்தர்கள் மனதை மேலும் வேதனைக்குள்ளாக்கியது.